சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் அதிகாரம்! – ரணில் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருக்கு, கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், வெற்றியை நோக்கி பயணிப்பதற்காக கட்சியை மேலும் பலப்படுத்தவுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். ஐ.தே.கவில் கடந்த வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

கட்சியில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு மேலதிகமாக, செயலாளர் பதவியொன்றும் உதவிச் செயலாளர் பதவியொன்றும் புதிதாக உருவாக்கப்படும் எனத் தெரிவித்த அவர், கட்சியை ஒழுங்குபடுத்தலின், மேலும் பலமேற்படுவதற்கான நடவடிக்கை இதுவெனத் தெரிவித்தார்.

கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளைச் சிறப்பாகக் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அண்மைய மாற்றங்களை, கட்சியின் இளைய உறுப்பினர்களே முன்னின்று மேற்கொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கட்சியின் இலக்கை அடைவதற்காக, இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புதிய பொறுப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

“ஐக்கிய தேசியக் கட்சி, அதன் ஆதரவாளர்களையும் மக்களையும் செவிமடுக்கின்ற ஒரு கட்சியாகும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மக்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட செய்தியை, நாங்கள் உரிய வகையில் வாசித்து, அடையாளங்கண்டுள்ளோம். அதைத் தொடர்ந்து, தேவையான மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!