ஆசிபா கொலை விவகாரம் – குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்!!

இந்தியாவையே உலுக்கிய சிறுமி ஆசிபாவின் கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜம்முவில் உள்ள கதுவா பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி தெரிவித்ததாவது, முஸ்லிம் சமுதாய மக்களை மிரட்டவே,சிறுமி ஆசிபாவை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம்.

ஆனால், அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே, மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியுள்ளார்.

கதுவா சிறுமி வழக்கில், சஞ்சி ராம், அவரது மகன் விஷால் உட்பட 5 பேர் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமி கடந்த 10 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவுக்காரச் சிறுவன் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தினார்.

சிறுமி 10 ஆம் திகதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13 ஆம் திகதி தான் அவர் வன்கொடுமைக்கு உள்ளான விடயம் தனக்கு தெரிய வந்ததாகவும், உறவுக்கார சிறுவன் தான் அதனைச் செய்ததாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால், அவனைக்காப்பாற்றவே ஆசிபாவைக் கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுமியைக் கொலை செய்து, எந்தச் தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் நினைத்துள்ளார். ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை.

ஒரு வாகனத்தில் ஏற்றி கதுவா சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கான திட்டம் ஜனவரி 7 ஆம் திகதியே தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருள்களும் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

கதுவா சிறுமியை பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, சிறுவனைக் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும், விரைவில் அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார். இதையடுத்தே அச்சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!