20ஆவது அரசமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு அரச தலைவர் வேட்பாளராகப் போட்டியிடுவார். அவ்வாறு இல்லாது அரச தலைவர் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த தெரிவு செய்வாராயின் பொது எதிரணியின் 52 உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள்.
இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க
அவர் தெரிவித்துள்ளதாவது,
–
கூட்டரசின் இறுதி அத்தியாயம் 202ஆம் ஆண்டுடன் முடிவடையும். நடக்கவுள்ள அரச தலைவர் தேர்தல் நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும் கூட்டு எதிரணியின் அரச தலைவர் வேட்பாளர் யார் என்பதை இதுவரை காலமும் கட்சி ரீதியில் உறுதியான தீர்மானம் மேற்கொள்ளவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிப் பெறக்கூடியவரையே அரச தலைவர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவோம்.
மகிந்த ராஜபக்ச அரச தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட 19ஆவது அரசியல் திருத்தம் தடையாக உள்ளது. ஆனால் தற்போது 20ஆவது அரசமைப்புக்குள் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அரச தலைவர் முறையை இரத்து செய்ய வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அவர் மீண்டும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற கருத்தும் காணப்படுகின்றது . மக்கள் விருப்பத்துக்கு முரணாக மகிந்த ராஜபக்ச செயற்பட முடியாது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவை 2020ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் போட்டியிடச் செய்ய கூட்டு எதிரணியின் தலைவர் தீர்மானித்தால் கூட்டு எதிரணியினர் தமது பூரண ஆதரவை வழங்குவார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் அரச தலைவர் வேட்பாளராக தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை முன்னிலைப்படுத்த தற்போது பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மக்கள் நிராகரித்த தேசிய அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்பது தொடர்பில் பகல் கனவு காண்கின்றனர். அரச தலைவராகப் போட்டியிடும் தகைமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு கிடையாது. சிலவேளை போட்டியிட்டால் மக்கள் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புகட்டிய அரசியல் பாடத்தை மீண்டும் புகட்டுவது மாத்திரம் நிச்சயிக்கப்பட்ட உண்மையாகவும், எதிர்ப்பார்க்க கூடிய விடயமாகவும் காணப்படும்.
நல்லாட்சி என்ற நாமத்தை வைத்துக் கொண்டு 2015
ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நாட்டில் எவ்வித பிரச்சினைகளுக்கும் தீர்வுக் காணப்படவில்லை. மக்களின் வாழ்க்கை செலவுகளை எவ்விதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது மாத்திரமே கூட்டு அரசின் பொருளாதார முகாமைத்
துவ கொள்கையாகவும், கடந்த கால அரசைப் பழிவாங்குவது என்பதைக் குறிகோளாகவும் கொண்டு செயற்படுகின்றது.கூட்டு எதிரணியினர் 2020ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் பெரும் வெற்றி பெறுவர். மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் நாடு மீண்டும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது. மக்களின் விருப்பத்தை முன்னாள் அரச தலைவர் நிறைவேற்ற வேண்டும்.- என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!