சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பநிலை, கடும் இடியப்பச் சிக்கல் நிலையை அடைந்துள்ளது. அரசுடன் இணைந்து செயற்பட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பிலும், தற்போது பிளவுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் 16பேரும் தத்தமது அமைச்சுப் பதவிகளைக் கைவிட்டதையடுத்து இந்தக் கடும் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் இந்தப் 16பேர் தரப்புக்கும், அரசில் தொடர்ந்தும் செயற்பட்டு வரும் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்புக்குமிடையேயான உறவில் இன்று கருத்து வேறுபாடுகள் தலை தூக்கியுள்ளன.
ஐ.தே. கட்சி அரசிலிருந்து சுதந்திரக்கட்சியின் சகலரும் வௌியேறி விடவேண்டும் என்பது ‘16பேர்’ தரப்பின் நிலைப்பாடு
அரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பு ஐ. தே. கட்சியின் தலைமையிலான அரசிலிருந்து வௌியேறிவிட வேண்டுமென ரணிலுக்கு எதிராக வாக்களித்த இந்த 16 பேர் தரப்பு கோரியுள்ளது.
பொது நலவாய நாடுகளது மாநாட்டில் கலந்துகொள்ள லண்டன் சென்றிருந்த அரச தலைவர், சுதந்திரக் கட்சிக்குள் தலையெடுத்துள்ள இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க அங்கிருந்தவாறே முயன்றதாகவும் தெரிய வந்தது.
அரச தலைவரது அழைப்பின் பேரில் லண்டனுக்குச் சென்ற அந்த 16 அமைச்சர்கள் குழுவின் மூன்று பிரமுகர்கள், சுதந்திரக் கட்சிக்குள் தலைதூக்கியுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து அரச தலைவருடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
தெரிய வந்த தகவல்களின் படி, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தேசிய அரசிலிருந்து வௌியேறும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
குறித்த 16 பேரது வௌியேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது மீதம்இருப்போர் சுதந்திரக் கட்சி சார்பான 10 அமைச்சர்களே. தேசிய அரசிலிருந்து வௌியேறி, தனித்து அரசமைக்கும் அளவுக்கு சுதந்திரக் கட்சி பலம் வாய்ந்ததாக இல்லை.
கூட்டு எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 53 நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவைப் பெற்றுக் கொண்டாலும் தேவைப்படும் பெரும்பான்மையை அந்தத் தரப்பினால் ஈட்டிட முடியாது.
இதனிடையே தேசிய அரசை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும்படி அரச தலைவர் விடுத்த பணிப்புரைக்கமைய குறித்த அந்த அறிக்கையும் அரச தலைவரிடம் கையளிக்கப்படவிருந்தது.
அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான அந்தக் குழுவில் மகிந்த அமரவீர, துமிந்த திசநாயக மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உட்பட்ட ஐந்து அமைச்சர்கள் அரச தலைவரால் நியமிக்கப்பட்டி ருந்தனர்.
16 பேர் தரப்புக்கும் மீதமுள்ள சுதந்திரக் கட்சியினருக்கும் இடையே கடும் கருத்து முரண்பாடுகள்
அதேவேளை சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலை குறித்து நோக்குகையில் அந்தப் 16 பேர் குழு தொடர்பாக கூட்டு எதிரணி மற்றும் அரச தலைவரது ஆதரவுத் தரப்பினர் மத்தியில் கருத்து முரண்பாடுகள் தலை தூக்கியுள்ளதாகக் கொள்ள முடிகிறது.
விசேடமாக அரச தலைவர் தரப்பின் அமைச்சர்கள் தம்மத்தியில் ஒருவர் மீது மற்றவர் குற்றம் குறை கூறி வருவது தற்போது பிரச்சினைக்கு உரியதொன்றாக ஆகியுள்ளது.
அரச தலைவர் தரப்புக்கும், அந்தப் 16 பேர் குழுவுக்குமிடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாகத் தோன்று கிறது.
கடந்த அரச தலைவர் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட முன்வந்த வேளையில், அதற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்த முக்கிய பிரமுகர்கள் ஐவரில் ஒருவர் துமிந்த திசநாயக ஆவார்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கி இட்டுச் செல்ல வேண்டுமானால், தேசிய அரசும் தொடர்ந்து செயற்பட வேண்டியது அவசியமென துமிந்த திசநாயக பகிரங்கமாகவே கருத்து வௌியிட்டுள்ளார்.
ஆனால் அந்தப் 16 பேர் குழுவோ, தேசிய அரசினின்றும் சுதந்திரக் கட்சி விலகிக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.
இது ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பட்ட நிலை என்பதுடன் சுதந்திரக்கட்சியின் எதிர்காலத்துக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் அமையும்.
தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த தரப்பினர், கட்சி மேற்கொண்ட தீர்மா னத்துக்கு எதிராகச் செய ற்பட்டவர்கள் குறித்த தகவல்களை விரைவில் வௌிப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கருத்து மோதல்கள் இரு தரப்பினர்கள் மத்தியிலும் வரவர அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலை நிலவுகிறது. கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் குறித்த அறிவிப்பு இது வரை வௌிவரவில்லை.
இருப்பினும், மத்திய செயற்குழு கூடி னாலும்கூட, அதுஅரச தலை வரது நிலைப்பாட்டுக்கு எதிராக முடிவொன்றை மேற்கொள்ளுமெனக் கருத இயலாது.
திரிசங்கு சொர்க்க நிலையில்குழம்பிப் போயுள்ள 16பேர் தரப்பு
தேசிய அரசினின்றும் வௌி யேறுவதில்லையென மத்திய செயற்குழு முடிவு செய்யுமானால் தலைமை அமைச்சருக்கு எதிராகச் செயற்பட்ட அந்த 16 பேர்குழு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்குத் தயாராக இருக்கின்றனர்.
அத்தோடு தேசிய அரசினின்றும் வௌியேற முடிவு செய்யப்பட்டால், சுதந்திரக் கட்சி அரச அதிகாரத்தை கைவிட்டு வௌியேற வேண்டி ஏற்படும். அவ்விதம் நிகழு மானால், ஐ. தே. கட்சி சிறு பான்மைக் கட்சிகளது ஆதரவுடன் நிர்வாகத்தைத் தொடர இடமுண்டு.
அத்தகையதொரு நிலை உருவாகுமானால், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரு மடங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டிய பிரேரணைகளைத் தவிர்த்து, சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய பிரேரணைகளை மட்டுமே நிறைவேற்றி, மீதமுள்ள ஒன்றரை ஆண்டுகாலம் ஐ. தே. கட்சியின் தலைமையிலான அரசு செயற்பட நேரும்.
அவ்விதம் இடம் பெறுமானால், அரச தலைவர் தமது நிர்வாகத்தை முன்னெடுக்கப் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள இடமுண்டு. தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த, அரச தரப்பில் செயற்பட்ட அந்தப் 16பேர் குழுவை மதிப்போடு வரவேற்போம் என கூட்டு எதிரணித் தரப்்பு தெரிவித்துள்ள போதிலும், அந்தத் தரப்பினருடன் தொடர்ச்சியாக அரசியல் உறவு பேண கூட்டு எதிரணி தயாராக இல்லை எனவும் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.
பதவிகளைப் பெறும் எதிர்பார்ப்பில் , அரசுடன் தொடர்பு பேணுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்தப் 16பேர் தரப்பில், குறிப்பிட்ட சில பிரமு கர்கள், முன்னர் கூட்டு எதிரணியை விமர்சித்து வந்த விதம் தொடர்பாகவும் அவர்கள் கடும் வார்த்தைகளில் அவர்களை விமர்சித்ததாக வும் கூறப்படுகிறது.
அவ்விதம் அந்தப் 16 பேர் தரப்பிலுள்ள குறிப்பிட்ட அந்தப் பிரமுகர்கள் கூட்டு எதிரணித் தரப்புக்குறித்து கேலி செய்யும் விதத்தில் வௌியிட்ட கருத்துக்கள் வௌி வந்த பத்திரிகை நறுக்குக்களைத் தொகுத்து வைத்திருந்த கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் கூட்டு எதிரணித் தரப்பில் உள்ளனர்.தம்மைத் தகாத வார்த்தைகளால் வர்ணித்துக் கருத்து வௌியிட்டு வந்த அந்தப் 16பேர் தரப்புடன் இணைந்து செயற்படுவது இயலாதோர் காரியம் என்பது கூட்டு எதிரணித் தரப்பினரது நிலைப்பாடாகும்.
அது மட்டுமன்றி, குறித்த 16பேர் தரப்பினர் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்த மைக்கான காரணங்கள் குறித்தும், கூட்டு எதிரணித் தரப்பி னர் தௌிவு படுத்தியுள்ளனர்.
அரசியலில் ஈடுபட்டுள்ள தமது மகன்மாரது எதிர்கால அரசியல் இருப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தல், எதிர்வரும் தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்துவது, மக்களது அதிருப்தியைத் திசை திருப்பி அவர்களது ஆதரவைத் திரட்டிக் கொள்ளல், எதிர்வரும் ஒன்றரை ஆண்டுக் காலத்தில் தமது அமைச்சுப் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளல், அதன் பின்னரும் அரசியல் அரங்கில் தமது அதிகாரத்தை உறுதிப்ப டுத்திக்கொள்ளல், போன்ற எதிர்காலத்திட்டங்களுடனேயே அந்தப் 16பேர் தரப்பு செயற்பட்டு வருவதாக கூட்டு எதிரணித்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பசில் ராஜபக்சவின் போக்குக் குறித்து கடும் அதிருப்தி கொண்டுள்ள ‘16பேர்’ தரப்பு
இவற்றின் மத்தியில் பசில் ராஜபக்சவின் ஆதரவுடன் பொது மக்கள் முன்னணியில் இணைந்துக் கொள்ள இந்தப் 16பேர் தரப்பு விருப்பம் கொண்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச தமது அதிகாரத்தை இழக்க நேர்ந்தமைக்கான காரணம், பசில் ராஜபக்சவின் செயற்பாடுகளே என்பது அந்தப் ‘16பேர்’ தரப்பின் கருத்தாகும்.
புதிய கட்சியான பொதுமக்கள் முன்னணியில் அந்த 16பேர் தரப்பு இணைந்து செயற்படுவது தொடர்பாக பசில் ராஜபக்சவின் ஆணைகளுக்கு உட்பட்டே தாம் செயற்பட நேரக் கூடுமென சந்தேகப்படுகின்றனர்.
தற்போது பொது மக்கள் முன்னணியை ஆக்கிரமித்துச் செயற்பட்டு வரும் பசில் ராஜபக்ச முன்னர் சுதந்திரக் கட்சி நிர்வாகத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு, ஏனைய அமைச்சர்களது செயற்பாடுகளில் அனாவசிய தலையீட்டை மேற்கொண்டு வந்திருந்ததாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இவற்றிடையே சுதந்திரக் கட்சி அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தேசிய அரசியலிருந்து விலகிக் கொள்ளாமல் எதிர்கால அரசியல் செயற்பாடுகளைச் சுதந்திரக் கட்சி முன்னெடுத்தல் அவசியமானது எனத் தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு புறத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ. ம. சு. கூட்டணி என்பவற்றின் பொதுச் செயலாளர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
இவ்விரு பதவிகள் தொடர்பிலும் பூரணமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டிக் கொண்டுள்ளனர்.
சுதந்திரக் கட்சிக்குள் பிரிவினை உருவானதே, கட்சியின் இரு செயலாளர்கள் காரணமாகவே என்ற குற்றச்சாட்டுக்களும் ஒரு புறம் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.
குறிப்பாக நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது, கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவின்போது கட்சியின் செயலாளர்கள் நடந்து கொண்ட விதம் கட்சியின் தீவிர ஆதரவாளர்களை முகம் சுளிக்க வைத்திருந்தது.
ஆயினும் அரச தலைவர் மைத்திரிபாலவோ கட்சியின் செயலர்கள் குறித்து கடும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கருத முடிகிறது.
அந்த வகையில் கருத்து வேறுபாடுகள் ஒருவர் மீது மற்றொருவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், பரஸ்பர விரோதங்கள் என்பவற்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவிதி நிச்சயமற்ற தொன்றாக, உறுதித்தன்மையற்றதொன்றாக ஆகிப்போயுள்ளது என்பது மட்டும் நிச்சயமாகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!