தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர் அடித்துக்கொலை – தம்பி ஆத்திரம்

தூத்துக்குடி அருகே குடிபோதையில் அண்ணனை தம்பியே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தை சேர்ந்தவர் சிவமுருகன் (வயது38). இவர் தமழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் ஆபிரகாம் லிங்கம் (33). டிரைவராக வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றி திரிந்தார்.

நேற்று சிவமுருகனுக்கும், ஆபிரகாம் லிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த ஆபிரகாம் லிங்கம், அண்ணன் சிவமுருகனை சரமாரியாக தாக்கினார். மேலும் கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தலையில் அடித்தார். இதில் சிவமுருகனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிவமுருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து ஆபிரகாம் லிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. குடிபோதையில் அண்ணனை தம்பியே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!