மகிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்தும் நிலைத்திருக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்வின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவுடன் இந்தியா சென்றிருந்த நாமல் ராஜபக்ச அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ராஜபக்ச குடும்பத்துக்கு வடக்கு, கிழக்கில் தனி மரியாதை உண்டு. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழ் மக்களை நாம் மீட்டெடுத்தோம். அதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள். வடக்கில் புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தில் எமக்கான ஆதரவு பெருமளவில் இருக்கின்றது. போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ராஜபக்சவின் ஆட்சியின் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியின்போது அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
அண்மையில் கிளிநொச்சிக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் வேதனையுடன் அதைத் தெரிவித்தார்கள். வெள்ள இடரால் அண்மையில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை நாம் வழங்கினோம்.வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை. அவர்களின் மனதில் நாம் என்றும் உத்தம புருஷர்களாக இருக்கின்றோம். ஆனால், தமிழகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் உயிர் தப்பி சுகபோக வாழ்க்கை வாழும் புலிகள் அமைப்பினருக்கு நாம் போர்க்குற்றவாளிகளாகத் தெரிகின்றோம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!