ராணுவ வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் – பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி 2,500 பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்.) 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து தீவிரவாதி மோத செய்தான்.

இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். இது நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தாக்குதலை நடத்தியது உள்ளூரைச் சேர்ந்த 22 வயது ஆதில் அகமதுதர் என்பது தெரிந்தது. அவன் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய காரை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தியதும் தெரிந்தது.

இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ பேசியதாக கூறப்படும் 17 நிமிட ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ரியாஸ் நைகூ பேசியதாவது:-

ஆடியோவில் பேசிய ரியாஸ் நைகூ

சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் (புல்வாமா) காஷ்மீர் மக்கள் மீதான அட்டூழியங்களுக்காக நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் இருக்கும் வரை தொடர்ந்து அழுகுரல் கேட்டு கொண்டேதான் இருக்கும்.

ராணுவம் இங்கு இருக்கும் வரை உங்களது வீரர்களின் சவப்பெட்டிகள் நிரம்பி கொண்டே இருக்கும். நாங்கள் சாக இருக்கிறோம். ஆனால் உங்களை வாழவிட அனுமதிக்க மாட்டோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்து விட்டோம்.

சரண் அடைவதை விட இறப்பதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். 15 வயது சிறுவர் கூட தற்கொலை படை பயங்கரவாதியாக மாறி ராணுவ வாகனத்தை தகர்க்கும் நாள் வெகு தூரம் இல்லை. அவர்கள் (ராணுவம்) இங்கு இருக்கும்வரை இந்தகைய தாக்குதல் நீடிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!