தம்பி பிரபாகரன் இப்போது இறந்து விட்டார். அவர் விட்டுச் சென்ற கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகின்ற எமது மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் தலைமையில் எமது இனம் ஒன்றுபட்டுத் திரண்டு போராடுவதன் மூலம்தான் எமது இழந்த உரிமைகளை பெற்றெடுக்க முடியும். இவ்வாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) ஏற்பாட்டில் தொழிலாளர் தினக் கூட்டம் கிட்டுப் பூங்காவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான சட்டத்தரணி க.சுகாஸ், காலம் சில தலைவர்களை இனம் காட்டும். 1940ஆம் ஆண்டுகளில் இனங்காட்டிய தலைவன்தான் ஜி.ஜி.பொன்னம்பலம். அதற்குப் பின்னர் காலம் தந்தை செல்வநாயகம் என்ற தலைவனை இனம்காட்டியது.
அதற்க்குப் பின்னர் இரண்டு தலைவர்களை காட்டிய காலம் அதற்கு பின்னர் தமிழ் தேசியத்துக்கு தலைமை தாங்குவதற்கு ஒரு கடவுளைக் காட்டியது. அது தான் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிராபகரன். அந்த இறைவனுக்குப் பின்னர் கடந்த உள்ளூராட்சித் தேர்தல், காலம் காட்டிய தலைவன்தான் மாமனிதனுடைய புதல்வன் அண்ணன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இவர்தான் தமிழ்த் தேசத்தின் கடைசித் தலைவன். இந்த தேசத்தை மீட்க இந்தத் தலைவனை நாம் தவற விடுமேயானால் தமிழ்த் தேசம் சிங்கள தேசமாகும். சிங்களத்தின் கனவு நனவாகும். ஒரு நாடு ஒரு தேசம் என்பது நிரூபிக்கப்படும்.அதை தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழர் தாயகத்தை மீட்க வேண்டுமாக இருந்தால் எமது அபிலாசைகள் கிடைக்க வேண்டும் என்றால் கேட்டு கேள்வி இல்லாமல் இந்தத் தலைவனின் பின்னால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பின்னால் அணி திரள்வதுதான் நாம் செய்யும் கடப்பாடு – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!