சமையல் அறையில் குடிகொண்டிருந்த 27 பாம்பு குட்டிகள்: ஒன்றின் பின் ஒன்றாக வெளியேறியதால் பரபரப்பு

புதுச்சேரி அருகே, வீட்டின் சமையல் அறையொன்றிலிருந்து, 27 பாம்பு குட்டிகள் உயிருடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி தர்மாபுரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டு குளியல் அறையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சுவற்றில் இருந்த ஒரு துவாரத்தின் வழியே பாம்பு குட்டி ஒன்று வெளியேறியுள்ளது. அதை, அடித்து கொன்றுள்ளார். தொடர்ந்து, அதே துவாரத்தில் இருந்து மேலும் நான்கு பாம்புக் குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறியுள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவற்றையும் அடித்துக் கொன்றுள்ளார்.

அத்துடன், மேலும் பாம்பு குட்டிகள் இருக்கலாம் என்ற அச்சத்தில், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை ஊழியர்கள் வந்து, பாம்பு குட்டிகள் வெளிவந்த சுவற்றின் துவாரத்தை துழையிட்டுள்ளனர். குளியல் அறையில் துவங்கிய அந்த துவாரம், சமையல் அறை வரை நீண்டது. சமையல் அறையில் தோண்டத் தோண்ட, அடுத்தடுத்து பாம்பு குட்டிகள் வெளியேறின. இப்படி வெளிவந்த 27 பாம்பு குட்டிகளை வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.

முழுவதுமாக தோண்டிய நிலையில், சமையல் அறைக்கு கீழே உள்ள பள்ளத்தில் தாய் பாம்பு முட்டைகள் இட்டிருந்ததும், அந்த முட்டைகள் பொரித்து குட்டிகள் வெளியேறியதும் தெரிந்தது. அத்துடன், பொரிக்காத சில முட்டைகளும் அங்கு இருந்தன. அவற்றையும் வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். “பிடிபட்ட பாம்பு குட்டிகள் அனைத்தும், விஷத் தன்மையற்ற நீர் சாரைப் பாம்பு வகையைச் சேர்ந்தது” என்று வனத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

வீட்டின் சமையறையில் 27 பாம்பு குட்டிகள் பிடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!