வவுணதீவு பொலிசார் கொலை – முன்னாள் எம்.பி உள்ளிட்ட 120 பேரிடம் விசாரணை!

மட்டக்களப்பு – வவுணதீவு பாலத்தில், இரண்டு பொலிசார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 120 பேரிடம் விசாரணை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிசார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிங்க தலைமையிலான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த முன்னாள் போராளி கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன கைது செய்யப்பட்டதுடன், இருவரும் 90 நாள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் என்பவருடைய 90 நாள் தடுப்பு காவல் 8 ம் திகதி முடிவடையும் நிலையில் அவரை மீண்டும் ஒரு மாதகாலம் தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்ததையடுத்து அவரின் தடுப்பு காவல் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன் கடந்த ஜனவரி மாதம் 11 ம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பாக இதுவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட முன்னாள் முன்னாள் விடுதலைப் புலிகளின பெண் உறுப்பினர்கள் என 120 க்கு மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் பல கோணங்களில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!