ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை இலங்கையில் அமைக்க வேண்டும்! – சிவாஜிலிங்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் குறித்த அலுவலகம் கொழும்பில் என்றாலும் அமைக்கப்பட வேண்டும். இந்த அலுவலகத்தினை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் குறித்த அலுவலகத்தினைச் சுதந்திரமாகச் செயற்பட அரசாங்கம் அனுமதிக்கவேண்டும்.

எனவே இவ் விடயத்தினையும் நாம் ஜெனீவா கூட்டத்தொடரில் வலியுறுத்த இருக்கிறோம். அண்மையில் ஐ.நா ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை எமக்கு சற்றே ஆறுதலளிக்கின்றது. நாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் குறித்த அறிக்கை எம்மை உற்சாகமடையச் செய்திருக்கின்றது. எனவே இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் காலநீடிப்பு வழங்கப்படக் கூடாதென்பதில் நாம் ஜெனீவாவில் எமது அழுத்தங்களைத் தொடர்ந்தும் பிரயோகிப்போம்” என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!