தமிழ்த் தரப்புகளை ஒருங்கிணைந்து செயற்பட வைக்க முயற்சி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் தரப்புக்களை ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.சுகாஸ் ஆகியோரும் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களும் தற்போது ஜெனிவாவில் களமிறங்கியுள்ளனர்.

எனினும், இவர்களிற்குள் ஒருங்கிணைந்த தன்மை ஏற்படாத நிலையில், தனித்தனியாகவே செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் தரப்பினரை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஜெனிவாவிலுள்ள சில தனிநபர்கள் ஆரம்பித்துள்ளனர். இது குறித்து கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனிடையே, உலகத் தமிழர் பேரவையினரும் இம்முறை ஜெனிவாவில் தமிழ் தரப்புக்களுடன் இணைந்து கொண்டு செயற்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.உலகத் தமிழர் பேரவையினரை விடுத்து ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதில் எந்த சிக்கலுமிருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தென்னிலங்கையிலிருந்து சென்றுள்ள சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!