இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா – அமெரிக்க கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் டேவிட்சனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை உங்வாங்கிக் கொள்வது. அவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், “இந்தோ- பசுபிக் நாடுகள் என்ற வகையில் சிறிலங்காவும் அமெரிக்காவும், பிராந்தியத்தைப் பாதுகாக்க ஒத்துழைக்க முடியும்.

இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் டேவிட்சனிடம், கடல்சார் இயங்குதன்மை விடயத்தில் சிறிலங்கா கடற்படையுடனான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும், திறந்த இந்தோ-பசுபிக் மூலம், இரு நாடுகளுக்கும் பயனளிக்க உதவுவது குறித்தும் கேட்டறிந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!