மாலியில் இடம்பெற்ற கொடூரம் ; குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் கொன்று குவிப்பு

மாலியில் கிராம மக்கள் மீது தோகோன் இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 134 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 55 கிராமவாசிகள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்துவந்த நிலையிலேயே இந்த சம்பவமும் நிறைவேறியுள்ளது.

குறிப்பாக தோகோன் பழங்குடியினர் அவ்வப்போது புலானி மக்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்டு ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் புகுந்தனர்.

அங்கு அவர்கள் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று கண்ணில் அகப்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் பலரை வெட்டிக்கொன்றனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 134 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலையடுத்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். .

மாலியிலுள்ள புலானி கிராமத்தில் சுமார் 3 மில்லியன் மக்கள் வாழ்கின்றபோதும் அங்கு பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!