சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டம் இல்லை – அமெரிக்கா

சிறிலங்காவுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு நிரந்தரமான தளம் எதையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு கிடையாது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிரந்தர இராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“சிறிலங்காவில் அமெரிக்க இராணுவ தளத்தை நிறுவுவதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை. அவ்வாறான திட்டம், ஒருபோதும் எமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அங்கமாக இருக்கவில்லை.

எதிர்காலத்தில் இங்கு, அமெரிக்காவின் எந்தவொரு நிரந்தர தளத்தையும் நிறுவுகின்ற திட்டங்கள் எதுவும் கிடையாது.

திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்கள் எதுவும் தரித்து நிற்கவில்லை.

எந்த நேரத்திலும், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் இங்கு வரக் கூடியளவுக்கு சிறிலங்கா அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.

எனினும், விமானந்தாங்கி கப்பல்கள் எதுவும் சிறிலங்காவுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!