உபசம்பதா மங்களய’ என்பது வைகாசி மாத பூரணை அன்று நடைபெறுகின்ற பௌத்தர்களின் முக்கிய சடங்காகும். இதுவே வெசாக் என்று சுட்டப்படுகிறது. இந்தச் சடங்கானது எதிர்வரும் 29.5.2018 அன்றுதான் நடைபெற இருக்கிறது.
29.4.2018இல் வந்த பூரணையானது உபசம்பதாவுக்கு உரிதல்ல. இங்குள்ள பௌத்த அமைப்புக்களும் இதையேதான் சொல்கின்றன. ஆனால் இந்த நாளைக் குறித்த சடங்குக்குரியதாகத் திணித்தமை மாத்திரமன்றி அதை ஒரு நாள், இரண்டு நாள்கள் என்று நின்றுவிடாமல் மூன்று நாளுக்குள்ளும் மீண்டும் திணித்து மே1 வரைக் கொண்டாடி முடித்துள்ளார்கள்.
ஏற்கனவே துறவிகளாக உள்ளவர்களில் ஐந்து பேரையாவது தரம் உயர்த்துவதாகவும் புதிதாகப் பிக்குகளாகச் சேர இருப்பவர்களை வரவேற்பதாகவும் இந்தநாள் அமைகிறது.
இதன் நிமித்தமே அஸ்கிரிய, மல்வத்த ஆகிய இரண்டு பீடங்களும் உபசம்பதா விடயத்தில் வருடா வருடம் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த ‘உபசம்பதா’ என்ற சடங்கு கீர்த்தி சிறி இராஐசிங்கன் காலத்திலிருந்து கிரமமாக ஒழுங்கமைக்கப்பட்டது. இந்த நடைமுறை காரணமாகவே வருடா வருடம் பௌத்த துறவிகளின் தொகை அதிகரித்து வருகிறது.
இந்த முக்கியத்து வம் வாய்ந்த சடங்குக்கு உரிய பூரணை அடுத்த மாதம் தான் எனப் பௌத்த பீடங்கள் தீர்மானித்திருந்தன. ஆனால் அரசோ, மே முதலாம் திகதியை வெசாக் தினமாகவும் மே ஏழாம் திகதியைத் தொழிலாளர் தினமாகவும் மாற்றிய மைத்திருக்கிறது. இந்த மாற்றியமைப்பானது அஸ்கிரிய, மல்வத்த ஆகிய இரண்டு பௌத்த பீடங்களையும் அவமதித்த தாகவும் ஆகிவிட்டது.
இதுபோன்ற பௌத்த முன்னீட்டுக்கு இதுவரை குறித்த பீடங்கள் கங்கணம் கட்டி வந்ததும், அரசுகளை அதன்படி ஆட்டுவித்தமையுமே வரலாறு. இப்போது அந்த நிலமை மாறியிருக்கிறது.
மே முதலாம் திகதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாகப் பின்பற்றப்படுவது தெரிந்ததே. உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அந்த நாள் விடுமுறை நாளாகும். ஆனால், இலங்கை அரசு மட்டும் அந்த நாளை ஒரு வேலை நாளாக அல்லது அரசசெயற்பாட்டு நாளாக அறிவித்திருந்தது.
அதுபோக, வெசாக்குக்காக அந்த நாளை ஒதுக்கி இருந்தால் கூட அந்த நாள் விடுமுறை நாளாக இருந்திருக்கும். 29.4.2018 அன்றைய நாள் வெசாக் தினமாக அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்த 29, 30ஆம் திகதி ஆகிய இரண்டு நாள்களில் அந்த நிகழ்வை நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால் அதை மூன்றாவது நாளும் நீடித்ததன் மூலமே மே தினத்தைக் குழப்ப முடிந்தது. அத்துடன் பௌத்த கோட்பாடுகளையும் பன்னாட்டு நடைமுறைகளையும் இலங்கை அரசு மீறியிருக்கிறது.
தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்திருக்கிறது அரசு
அரச தலைவரின் கட்சியும், தலைமை அமைச்சர் சார்ந்துள்ள கட்சியும் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியிலும் பார்க்க வீழ்ச்சியையே சந்தித்திருந்தன. இந்தநிலையில் இந்த மே தின மாற்றம் என்பது கடுமையான விமர்சனங்க ளையும், மக்கள் எழுச்சியையும் ‘நல்லாட்சி’ என்று சொல்லப்படும் அரசுக்கு எதிராக எழச் செய்திருக்கிறது. பௌத்த மதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் காட்டி மே தினம் முழுஅளவில் மேற்கொள்ளப்படாது தடுக்கப்பட்டிருக்கிறது.
தமது உரிமைகளை உரத்துக் கூறக்கூடிய தமக்கான சட்ட பூர்வ அதிகாரம் உள்ள நாளொன்றைத் தொழிலாளர்கள் இழந்திருக்கிறார்கள். பல தொழிற்சங்கங்கள் அரசின் பிடிக்குள் அல்லது அரசு சார்ந்து செயற்படுவதால் தொழிலாளருக்குப் பாதாகமான இந்த முடிவை அந்தந்தத் தொழிற்சங்கங்கள் எதிர்க்க வில்லை. அதேவேளை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பண்டாராநாயக்க ஞபாகார்த்த பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் மூத்த தொழிற்சங்கவாதிகளை நினைவு கூரும் நிகழ்வு ஒன்றில், மே தினத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றிருப்பது வேடிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து இந்த அரசு தமக்கு ஏற்றவாறு மே தினத்தை வடிவமைத்திருக்கிறது என்பதே வெளிப்படை.
முதலாளிகள் கொண்டாடும் தொழிலாளர் தினம்
மே தினமானது 1886 சிக்காகோ தீர்மானத்தின் பின் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்தத் தினத்தை உலகத் தொழிலாளர்கள் போராடியே பெற்றார்கள். உலக தொழிலாளர் தினமாகவும், உலகத் தொழிலாளர்கள் தமது உரிமைகளைப் பெற்ற தினமாகவும் அங்கீகரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் தொழிலாளர் ஓய்வின்றிப் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தொழிலாளர்கள் தங்குமிடங்களில் இருந்த மெத்தைகள் எப்போதும் சூடாகவே இருந்தன. ஒரு தொழிலாளி நித்திரையில் இருந்து எழும்போது இன்னொரு தொழிலாளி அதில் படுக்கும் நிலையாலேயே அவை சூடாகிக் காணப்பட்டன. சிக்காக்கோ தீர்மானத்தின்படி ஒரு தொழிலாளி 8 மணி நேரம் பணியாற்றினால் போதும் எனவும் அவர்களுக்கான ஊதியம் இவ்வளவு தான் எனவும் எட்டப்பட்டது.
அதன் வழி கடைப்பிடிக்கப்படும் இந்த மே 1, தொழிலாளர் தமது பிரச்சினைகளையும் தேவைகளையும் சட்ட பூர்வமாக வெளிப்படுத்தும் நாளாகப் பின்பற்றப்பட்டது. 19ஆம் நூறுற்றாண்டின் பின்பகுதியில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டதால் இந்தத் தொழிற்சங்கள் ஊடாக சம்பளக் கோரிக்கை, இழப்பீடுகள், நஷ்ட ஈடுகள், சட்டநடவடிக்கைகள் எனப் பல விடயங்கள் நடைமுறைக்கு வந்தன.
தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கென தொழில் நீதி மன்றங்கள் கூட உருவாக்கப்பட்டன. இந்த நாள் கடைப்பிடிப்பில் கால்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகிய மூவரின் படங்களும் தொழிலாளர் சின்னமும் முதன்மைப்படுத்தப்பட்டு ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. காரணம் இந்த மூவரும் தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள் என்பதால் தான். இத்தகைய நடவடிக்கைகளின் பயனாகவே கைத்தொழில் மய நாடுகளுக்கு இயன்றளவில் தொழிலாளர் உரிமைகளைப் பேண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதன் விளைவாகவே ‘ நலன்புரி அரசுகள்’ உருவாக்கப்பட்டன.
மேற்படி கடப்பாடுகள் இலங்கைத் தொழிலாளர்கள் விடயத்திலும் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகின்றபோதிலும் தொழிலாளர்களை அவர்களுடைய பிரச்சினை களைப் பேச விடாது தொழில் வழங்குநர்களே மே தினத்தை ஒழுங்கு செய்யும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது மே தினம் என்ற உள்ளடக்கத்துக்கு முரண்பட்டதாகும்.
பௌத்தர்களுக்கோ,
அரசியல்வாதிகளுக்கோ உரியதல்ல மே1.
மலையகத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நீண்டகாலம் போராடி வருகின்றனர். அவர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்கள் போதுமான அளவில் வழங்கப்படவில்லை. அவர்களின் இந்த நிலைக்கு அவர்களைப் பிரதி நிதிப்படுத்தும் தொழிற்சங்கங்களே முக்கிய காரணமாகும். ஆனால் மே தினத்தை இந்தத் தொழிற்சங்களே முன்னின்று நடத்துகின்றன. இதன் மூலம் தொழிலாளர்களின் பிரச்சி னைகள் தீர்க்கப்பட போவதில்லை. தொழிலாளர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களுக்கான சிறப்பு நாளே மே 1. அந்த நாளை அவர்களே கொண்டாட வேண்டும். அந்த நாளைக் கொண்டாட விடாது அவர்களின் குரல் வளையை நசிப்பது என்பது அனைத்து மனித உரிமை மீறல்களை விடவும் உச்சமானது. அதையே இந்த அரசும் செய்திருக்கிறது.
வினோத், கண்டி
தொழிலாளர் தினத்தை அவங்கட இஸ்ரம்போல மாத்தியமைக்கிறது சரியில்ல. அதை அந்த நாளிலைதான் கொண்டாடியிருக்கணும். அதோட இதத் தொழிலாளிங்கதான் கொண்டாடணும். மற்றவங்க, கட்சியள் கொண்டாடுறது சரியில்லத்தானே…? இல்லாட்டி ஏதாவது அமைப்பாச் சேர்ந்து கொண்டாடலாம். முதல்லேயே தொழிலாளர் தினத்த இங்க தொழிலாளர்கள் கொண்டாடுறது குறைவு, இப்ப அந்தத் தினத்திலையும் கொண்டாட முடியாம இருக்கு.
க. அமரசிங்கம், மகாறம்பைக்குளம்
நிறைய அடிமட்டத் தொழிலார்களிருக்கிற இந்த நாட்டில அவைக்குரிய நலன்கள், வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கிறதில்லை. மீன் பிடித் தொழிலைப் பொறுத்தளவில பல பிரச்சினையள் இருக்குது. முக்கியமா பிடிக்கிற மீனுகளச் சரியா விற்க முடியிறதில்ல. இடைத்தரகர்களா இருக்கிறவைக்கும் யாவாரியளுக்குமே அதிக லாபம் கிடைக்குது. இருக்கிற இடத்தில இருந்து கொண்டு விலை சொல்லுறார்கள். நாள் முழுக்க வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்ட நாங்கள் வெறுங்கையுடனேயே வீட்ட போறம். இத முழு நேரத் தொழிலாப் பல குடும்பங்கள் செய்து வாறம். இதை நம்பியே எமது குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் எமக்குரிய பின்னுதவிகளோ, அரவணைப்போ வழங்கிறதில்ல. இந்த நாளிலையாவது இதுகளப் பற்றிக் கதைப்பாங்கள் எண்டு பாத்தால்… மேடைபோட்டு என்னென்னவோ கத்துறாங்கள்?
கு. ராஜினிதேவி, யாழ்ப்பாணம்
தொழிலாளர் தினத்த அந்த நாளில தானே கொண்டாட வேணும்…? அதுவும் தொழிலாளர்கள்தானே கொண்டாடவேணும்…? அரசியல் கட்சிகளை விட்டிட்டுத் தொழிலாளர் அமைப்புக்கள் மூலமாக் கொண்டடலாம் தானே…? தொழிலாளர் தினத்த நான் அறிஞ்ச வரையில இது வரைக்கும் தொழிலாளர்கள் மனப்பூர்வமாக் கொண்டாடினதே இல்ல. கூட்டங்களுக்குத் தொழிலாளர்களத் தெண்டிச்சு அழைச்சுக் கொண்டுபோன காலம் கொஞ்சம் மாறிற்று. மாறினதாலை இப்ப இதைக் கொண்டாடுறதிலை முக்கால்வாசிப்பேர் தொழிலாளர்களே இல்ல. அண்டாடு உழைக்கிற அடிமட்ட ஆக்களுக்கு இதிலை ஈடுபாடு இல்லை. இதை அப்பிடி ஆக்கிப்போட்டினம்.
ம.பெரியசாமி, கோவில்புதுக்குளம்
இன்று தொழிலார்களின் வேலை நேரமாக 8 மணித்தியாலம் உள்ளதாகக் கூறப்படுகிறது ஆனால், அவ்வாறு எங்குமே நடைமுறையில் இருப்பது போலத் தெரியவில்லை. நாம் எல்லாம் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறோம். ஆனால் உழைப்புக்கேற்ற வருமானம் எமக்குக் கிடைப்பதில்லை. உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விட்டன. அத்துடன் பொருள்களின் விலை ஏற்றம் காரண மாக அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் மிகவும் பல கஷ்டங்களைச் சந்தித்து வருகிறோம். இங்கு தொழிலார்களின் நலன்களை பற்றி யாருமே சிந்திப்பதில்லை. முதலாளிகளையே அரசு பாதுகாத்து வருகிறது எனவே அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை பெறுவதற்கு ஒன்று படவேண்டும்
வா.பிரதீபன்,வவுனியா
சாதரணமா ஒரு நாளைக்கு 10மணித்தியாலங்கள் வேலை செய்யிறம். ஆனா அதுக்கேற்ற வருமானம் இல்ல. அதால நிறையக் கஸ்ரம். விலையெல்லாம் கூடிப்போட்டு வருமானம் அப்பிடியேதானிருக்குது. சில வேலையளுக்கு மிசினுகள் வந்திற்று. முன்ன போல இல்ல. வேலையளும் அப்பிடி இப்பிடி. இப்பிடியே போனா எங்களுக்கு நடுத்தெருதான். அரசாங் கங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படுறது போல தெரியெல்ல. தொழிலாளர் தினமெண்டு வாற ஆக்களும் அப்பிடித்தானே…
ஐ.எல்.எம்.பாறூக் – கல்முனை
தொழிலாளர் வர்க்கம் குருதி சிந்தி, சிக்காக்கோ நகரில் அறிவித்த மேதினம், பன்னாட்டு ரீதியாக மே முதலாம் திகதியே கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் இந்த தொழிலாளர் தினம், மே7ஆம் திகதிக்கு பின்தள்ளப்பட்டமை இந்தத் தினத்தின் மகிமையை மழுங்கடிக்கச் செய்யும் செயல் மட்டுமன்றி, சமாதானம், இன நல்லிணக்கம் பற்றி விதந்துரைக்கும் கூட்டு அரசு, இது பௌத்த நாடேதான் எனக் கட்டியம் கூறும் செயல்பாடுமாகும்.அரசியல்வாதிகள் மேதின மேடைகளில் முழங்கும் வீராப்புகள் வெறும் வெற்றுப் பேச்சுகளேதான். இவர்கள் என்னதான் செய்தார்கள்? தொழிலாளர் வர்க்கம் இவர்கள் மூலம் கண்ட விமோசனம்தான் என்ன? அவர்கள் தம்மனச்சாட்சியைத் தொட்டுக்கேட்கட்டும்!
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!