வாக்குப்பதிவு மையத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த வாக்காளர்கள்!

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் வாக்குப்பதிவு மையத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூதாட்டி ஒருவருக்கு வாக்கு இல்லை என்று கூறிய நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துவிட்டு திரும்பிய மூதாட்டி வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சென்னை புதுப்பேட்டைப் பகுதியை சேர்ந்த சிசிலி மோரல் என்ற 75 வயது மூதாட்டி, மத்தியசென்னை தொகுதிக்குட்பட்ட புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களிக்க வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வீடு திரும்பிய மூதாட்டி மாரடைப்பால் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேடப்பட்டியில் வாக்களித்து விட்டு வெளியே வந்த 75 வயது முதியவர் கிருஷ்ணன் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே முருகேசன் என்ற முதியவர் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!