கைதியின் முதுகில் ஓம் என எழுதிய அதிகாரி – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் திகார் சிறையில் கைதியொருவரின் முதுகில்இரும்பு கம்பியினால் ஓம் என்ற இந்து மத அடையாளத்தை அதிகாரியொருவர் பொறித்தமை குறித்து நீதிமன்றம் விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கைதியொருவரின் முதுகிலேயே அதிகாரியொருவர் ஓம் என்ற சொல்லை இரும்புகம்பியால் எழுதியுள்ளார்.

சிறைக்கண்காணிப்பாளர் ராஜேஸ் சவுகான் என்பவரே இந்த துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட கைதி தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள குறைபாடுகள் குறித்து முறையிட்டவேளை இந்த அதிகாரியும் மற்றொருவரும் இணைந்து கைதியை தாக்கியுள்ளனர்.

பின்னர் ராஜேஸ் சவுகான் பழுக்க காய்ச்சிய கம்பியினால் கைதியின் முதுகில் ஓம் என்ற அடையாளத்தை பொறித்துள்ளார்

பாதிக்கப்பட்ட கைதி தனது வழக்கறிஞருக்கு இது குறித்து தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டவேளை பாதிக்கப்பட்ட நபர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை காண்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றம் 24 மணிநேரத்தி;ற்குள் இது குறித்த விசாரணையை பூர்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளது.

சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏனைய கைதிகளின் வாக்குமூலங்களை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!