அரசமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் 20 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குமார் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தத் திருத்தம் நாடு பிளவுபடுவதற்கு வழி வகுத்து விடுமெனக் கூறியே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரங்களில் பலவற்றை இல்லாதொழிக்கும் வகையிலேயே அரசமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மகிந்த தரப்பினரும் பிக்குமார்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
நிறைவேற்று அதிகார
நடைமுறையால் நாட்டு
மக்களுக்கு பாதிப்பே அதிகம்
அரச தலைவருக்கு அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் நாட்டின் ஜனநாயக உரிமைகளை முற்றாகவே ஒழிக்க வல்லவை. அரச தலைவர் ஒரு சர்வாதிகாரியைப் போன்று செயற்படுவதற்கு இது வழி வகுக்கின்றது. அரச தலைவரை நீதி மன்றங்களினால்கூடக் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு எதிராகக் கேள்வி எழுப்புவதற்கும் எவருக்கும் உரிமை கிடையாது.
நாடாளுமன்றச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், குறித்த காலத்தின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவதற்கும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வகை செய்யப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தாம் மீண்டும் வெலிக்கடைச் சிறைக்குச் செல்ல நேரிடுமென சரத் பொன்சேகா கூறியுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்சவினால் சரத் பொன்சேகா எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். தம்மை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட ஒரே காரணத்துக்காகத், தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி மகிந்த, சரத்பொன்சேகாவுக்கு எத்தனையோ இன்னல்களை விளைவித்தார்; அவரைக் கடுமையாகப் பழி வாங்கினார். விசாரணைகளின்றி அவரைச் சிறையில் அடைத்தார். அவரது பதவி, பட்டங்கள், பதக்கங்கள் யாவும் பறித்தெடுக்கப்பட்டன. அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததன் பின்னர் இவையாவும் பொன்சேகாவுக்குத் திரும்பவும் வழங்கப்பட்டன. சிறைவாசத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். பீல்ட் மார்ஷல் என்ற உயர்ந்த அந்தஸ்தும் அவருக்கும் வழங்கப்பட்டது. தற்போது அமைச்சராகவும் அவர் உள்ளார். ஆனால் மகிந்தவோ அல்லது அவரது தரப்பைச் சேர்ந்த ஒருவரோ, அரச தலவைராக வந்துவிட்டால், பொன்சேகாவின் நிலை பழைய மாதிரி ஆகிவிடுமென்பதில் ஐயமில்லை. இதனால் தான் பொன்சேகா மகிந்த குறித்து கடுமையாக அச்சப்படுகின்றார்.
அரசமைப்புக்கான 20ஆவது
திருத்தம் குறித்து இனவாதிகள்
சிங்கள மக்களைப் பயமுறுத்துகின்றனர்
இதேவேளை அரசமைப்பில் 20 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதன் ஊடாக, தனிநாடு உருவாகிவிடமென பிக்குமார் சங்கம் கூறியுள்ளமை வேடிக்கையானது. அதுமட்டுமல்லாது, அது இனவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், 20 ஆவது திருத்தமும் நடைமுறைக்கு வந்தால் தமிழர்கள் தனிநாட்டைப் பெற்று விடுவார்களென அவர்கள் கூறுகின்றனர். இது பெரும் பான்மையின மக்களைக் குழப்பி விடுகின்றதொரு செயலாகும்.
நிறைவேற்று அதிகாரம் தமிழர்களையும் பாதித்துள்ளது. ஆனால் பல்வேறு பாதிப்புக்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்க்கை செல்வதால் இதையொரு பொருட்டாக அவர்கள் கருதுவதில்லை. தற்போதைய அரச தலைவரான மைத்திரிபால சிறிசேன தமது நிறைவேற்று அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தியிருந்தால், முன்னைய ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடிகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களை உரிய வகையில் தண்டித்திருக்கலா மெனக் கூறுவோரும் உண்டு. ஆனால் அவர் அவற்றைச் செயலளவில் பயன்படுத்த முன்வருவதில்லை.
பிரபாகரனுக்குப் பின்னர் தமிழ்த் தலைவர்கள் எவருமே தனிநாடு தொடர்பாகப் பேசுவதில்லை. ஒரே நாட்டுக்குள் தமிழர்களுக்கு கூட்டாட்சி முறையிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றே அவர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் இதைப் பொறுமையாக ஆராய்ந்து பார்ப்பதற்கு இனவாதிகளுக்கும், பெளத்தமதத் தலைவர்களுக்கும் நேரம் கிடைப்பதில்லையென்றே எண்ணத் தோன்றுகின்றது.
அரசமைப்புக்கு அடிக்கடி
திருத்தம் மேற்கொள்வது
உகந்த செயலல்ல
இதேவேளை அரசமைப்பில் அரசியல்வாதிகளின் எண்ணத்துக்கு ஏற்றவாறு காலத்தக்குக் காலம் திருத்தங்களை மேற்கொள்வது சரியானதொரு நடவடிக்கையாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் ஒரே தடவையில் சகல சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் அல்லது புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பாகக் கவனம் செலத்துதலாம். சிறுபான்மையின மக்களின் விருப்பமும் அதுதான்.
ஆனால் தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களின் விருப்பங்களை ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. தாம் எதைச் செய்தாலும், நாட்டு மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இனப்பிரச்சினை தீர்வு காணப்படாமல் இழுபடுவதற்கு இந்த மனநிலையே பிரதானமான காரணமாகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!