முன்னாள் போராளியை விடுக்க ஜனாதிபதி இணக்கம்! – மனோ கணேசன் தகவல்

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

“கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க, ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிசாரை கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாகஜனாதிபதி சற்று முன் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!