இறந்ததாக நினைத்த இந்திய மீனவர் 23 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை யூடியூப் அலைவரிசையில் தோன்றிய அதியசம்

கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகிய நான்கு பேர் மீன்பிடிக்கு கடலுக்கு சென்ற நிலையில் மறுநாள் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பாததால் இவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் பல நாட்களாக தேடிய நிலையில் மீன்பிடித் துறை சார்பாக கடலில் மாயமானவர்கள் பட்டியலில் இந்த நான்கு பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்பிடித்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடயே கடந்த மே மாதம் 9ஆம் திகதி இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரக்கூடிய யூடியூப் அலைவரிசை தொகுப்பொன்றில், கொழும்பு பகுதியில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களின் புகைப்படங்கள் ஒளிபரப்பட்டது. இதனை பார்த்த ராமேஸ்வரத்திலுள்ள முச்சக்கரவண்டி ஓட்டுநரான ராஜேஷ் என்பவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நரைத்த தலைமுடியுடன் முகத்தில் தாடியுடன் ஒரு பெரியவரை பார்த்தபோது அது தனது பெரியப்பா போல் உள்ளதை அறிந்து உடனே தனது அக்காவிடம் இந்த தகவலை தெரிவித்தவுடன் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி புகைப்படத்தில் இருந்தது மீனவர் பரதன் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று குடும்பத்தினரை சந்தித்த மீன்பிடித்துறை அதிகாரிகள் பரதன் காணாமல் போனது குறித்து எழுத்து பூர்வமாக மனு எழுதி பெற்று கொண்டனர். மேலும் இதுகுறித்து குடும்பத்தினர் கூறுகையில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் முன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர் மாயமானதாகவும் படகு உரிமையாளரிடம் கேட்டபோது தனது மகனையும் காணவில்லை என தெரிவித்துள்ளார் ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாயமான நாளை பரதன் இறந்த நாளாக நினைத்து வருட வருடம் குடும்பத்தினர் வழிபாடு நடத்தி வருகிறோம்;.இந்நிலையில் யூடியூப் அலைவரிசையில் வந்த புகைபடத்தை பார்த்த உடன் அதிர்ச்சி அடைந்தாகவும் மனநிலை பாதிக்கப்பட்டு கொழும்பு பகுதியில் சுற்றித் திரியும் பரதனை மீட்டு வர வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!