வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகச் சுடரை பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து யாராவது ஒருவர் ஏற்றட்டும். நான் ஏற்ற மாட்டேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாண சபை ஒருங்கிணைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்கப்பட்ட அல்லது உறவுகளைப் பறிகொடுத்த தரப்புக்களில் இருந்து யாரவது ஒருவர் அதனை ஏற்ற வேண்டும். முதன்மை ஈகச் சுடரை நான் ஏற்ற மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் – என்றார்.
இதேவேளை கூட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுச் சுடரை யார் ஏற்றுவது என்பது தொடர்பிலேயே பல பிரச்சனைகள் உருவாகின்றன. அந்த விடயத்தில் உங்களின் முடிவு வரவேற்கத்தக்கது.
அன்றைய தினம் வடக்கு மாகாண சபை சார்பாக ஒரு அறிவித்தல் உரையை மாகாண முதல்வர் என்ற ரீதியில் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அது உலகத்துக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறும் உரையாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் உரையாற்றுவது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. அவ்வாறான உரை நிகழ்த்துவதாக இருந்தால் முதல் நாளே ஊடகங்கள் ஊடாக அதை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!