தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் காத்தான்குடியில் கைது

தற்கொலைக் குண்டுதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கொள்வனவு செய்து, அதன் ஆசனத்தை மாற்றியமைத்துக் கொடுத்தவர் என்ற சந்தேகத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் நேற்றுமுன்தினம் மாலை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுகளுடன் தரித்து நின்ற வாகனம், ஏப்ரல் 22ஆம் நாள், சிறப்பு அதிரடிப்படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது.

இந்த வாகனத்திலேயே கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய குண்டுதாரியும், கிங்ஸ்பெரி விடுதி குண்டுதாரிகளும் கொண்டு சென்று இறக்கி விடப்பட்டிருந்தனர்.

அந்த வாகனம் கிங்ஸ்பெரி விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக்குண்டுதாரி அப்துல்லா எனப்படும் ஆகமட் அஸ்ஸம் முகமட் முபாரக்கிற்கு சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்தது,

அந்த வாகனத்தை அவருக்கு வாங்கிக் கொடுத்து, அதன் ஆசனப் பகுதியை மாற்றியமைத்துக் கொடுத்த முக்கிய சந்தேக நபரின் நான்கு வெவ்வேறு ஒளிப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.

அந்தப் படங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை புதிய காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!