இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை தொடங்குகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை தொடங்குகிறது.

முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது.

வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவது 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் நாளை மாலைக்கு பின்னரே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!