தெரிவுக்குழுவில் 8 எம்.பிக்கள் – மகிந்த, மைத்திரி அணிகள் மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக, 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும், அந்த தாக்குதல்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அல்லது அமைச்சர்கள் உதவியுள்ளனரா என்று கண்டறிவதற்காக தெரிவுக். குழு ஒன்றை நியமிக்க நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கமைய, நேற்று 8 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழுவின் விபரத்தை சபாநாயகர் அறிவித்தார்.

இந்த தெரிவுக்குழுவுக்கு தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் உறுப்பினர்களாக அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கவிந்த ஜெயவர்த்தன, ஜெயம்பதி விக்ரமரத்ன, எம்,ஏ.சுமந்திரன், ஆஷூ மாரசிங்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தெரிவுக்குழுவில் இடம்பெற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த – மைத்திரி அணிகள் இரண்டும் மறுத்து விட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!