இன்றைய அரசியலரங்கில் நாட்டு மக்களால் பெருமளவில் பேசப்படுமொரு விஷயம்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை ஒழிப்பதென்பதாகும். இந்த முறைமை ஒரு சர்வாதிகாரத் தன்மை கொண்டதெனக் கருதப்படுமானால், மேற்குலக வல்லரசான அமெரிக்காவில் இன்றும் நடைமுறையிலிருப்பது இதே அரசியல் தலைவர் நடைமுறையே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் நடைமுறை கடந்த 229ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வருகிறது. இந்த நடைமுறை பொருத்தமற்ற தொன்றானால், அமெரிக்காவில் இத்தனை ஆண்டுகளாக அதற்கெதிராக ஏன் எதிர்ப்பு உருவாகவில்லை? அத்தோடு வேறுசில நாடுகளும், இப்போது தமது நாடுகளில் நடைமுறையிலிருக்கும் ‘வெஸ்மினிஸ்டர் முறை’ யிலிருந்து மாறி நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் நடைமுறைமைக்குத் தம்மை மாற்றிக்கொள்ள விரும்புகின்றனவே?
‘வெஸ்மினிஸ்டர் முறை’ என்பது பிரித்தானியா வின் அரச நிர்வாகத்தை ஒரு ‘குடியரசு’ மாதிரிக்கு விஸ்தரிக்கும் முறைமை ஆகும். நாட்டில் அரசரென்ற ஒருவரேயில்லாத நிலையில், ஏன் பெயரளவில் ஒரு அரச தலைவர் பதவியைப் பேண நாம் எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிட வேண்டும்?
நிறைவேற்று அதிகார நடைமுறையுள்ள எந்தவொரு நாட்டிலும் அதற்கு எதிர்ப்பு உருவானது கிடையாது
அந்த வகையில், நிறைவேற்று அரச தலைவர் நடைமுறை வழக்கிலுள்ள, இலங்கையைத் தவிர்ந்த எந்தவொரு நாட்டிலும் நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழித்துவிட வேண்டுமென்ற கோரிக்கை ஏன் முன்வைக்கப்படவில்லை என்பது குறித்து ஆராய்தல் பொருத்தமாகும்.
1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசமைப்பில் காணப்படும் பலவீனங்களை, நிறைவேற்று அரச தலைவர் பதவியின் பலவீனங்களென தவறாக எடைபோடப்பட்டமையே இதற்கான பதிலாகும். எனவே 1978ஆம் ஆண்டின் அரச மைப்பிலுள்ள பலவீனங்கள் எவை என அடையாளம் காணமுயல்வது பொருத்தமானதாகும்.
எங்கள் நாட்டின் அரச தலைவர் பதவிதான் , இந்த உலகத்திலேயே அதிக அதிகாரம்மிக்க அரச தலைவர் பதவி என்ற நம்பிக்கையொன்று எம்மவர்கள் மத்தியில் உண்டு. இருப்பினும், அமெரிக்க அரச தலைவர் பதவி அதனைவிட அதிகாரம் கொண்டதொன்று. இற்கு இரு உதாரணங்களைக் குறிப்பிட்டுக் காட்ட இயலும். இலங்கையின் அரச தலைவர், நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்துதான் அமைச்சர்களைத் தெரிவு செய்ய முடியும் என்ற அளவுக்கு, அரச தலைவரது அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் அரச தலைவர் விரும்பினால், நாட்டின் எந்தவொரு குடிமகனையும் அமைச்சராக நியமிக்க இயலும்.
இலங்கை அரசமைப்பில் அரச தலைவருக்கு
சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது
இலங்கையின் அரச தலைவருக்கு சட்டமியற்றுவதில் எதுவிதமான அதிகாரங்களுமில்லை. நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமூலத்திலும் சபாநாயகர் கையெழுத்திட்டவுடன் அது சட்டமாகிவிடும். இதற்கு மாறாக அமெரிக்காவில் அதற்கான சபையில் நிறைவேற்றப்பட்டதொரு சட்டமூலம், அரச தலைவர் அதில் கையொப்பமிட்டால் மட்டுமே சட்டமாக அனுமதிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் ஒரு சட்டமூலத்தை நிராக ரிக்கிறாராயின், அது அமெரிக்க காங்கிரஸினாலும், அமெரிக்க ‘செனட்’ சபையினாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சட்டமாக வாய்ப்புண்டு.
அமெரிக்காவின் அரச தலைவருக்கெதிராக எந்தவொரு பரப்புரை நடவடிக்கைகளிலும் எவரும் ஈடுபடுவதில்லை. அந்த நாட்டின் அரசமைப்பில் அரச தலைவருக்கு மதிப்பு அளிக்கும் வகையிலான சட்ட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க அரச தலைவர் பதவி உலகில் அதி கூடிய அதிகாரம் கொண்ட பதவியாக ஆக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரச தலைவரும் தமது செயற்பாடுகள் குறித்து எத்தகைய வியாக்கியானமோ, விளக்கமோ எவருக்கும் கொடுக்கத் தேவையில்லை. ஆதலால் அவரிடம் எவரும் அவரது முடிவுகள் குறித்து கேள்வி எழுப்ப இயலாது. இந்த நிலமைதான் இலங்கை அரச தலைவரைக் கடினமான முடிவுகளை எடுக்க வலியுறுத்துகிறது.
ஆனால் அமெரிக்க அதிபர், அந்த நாட்டின் செனட் சபைக்கு, பதில் கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் பிரபல அரச தலைவர்களான ஆபிரகாம் லிங்கன், வூட்ரோ வில்சன், கெரால்ட் போர்ட் போன்றவர்கள் எடுத்த சில முடிவுகளுக்கு அமெரிக்க செனட் சபை சவால் விடுத்தமையும் வரலாற்றுப் பதிவுகள்.
நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்படுமென அரச தலைவர்
கூறினாலும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் இடம்பெறவில்லை
ஆனால் இலங்கையின் அரச தலைவருக்கு சட்டரீதியான ஆணைமூலமான கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட வில்லை. அவர் பிரிட்டன் மகாராணி அனுபவித்த அந்தஸ்துக்களை அனுபவிக்கிறார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த முறைமையை இல்லாதொழிக்கப் போவதாகக் கூறினாலும், அவர் அவ்விதம் செயற்படவில்லை. அரசமைப்புக்கான 19வது திருத்தத்தின்படி, அரச தலைவருக்குரிய விசேட அதிகாரம் ஒழிக்கப்படுவதாக தவறானதொரு கருத்து நிலவுகிறது.
அரச தலைவரைப் பொறுப்புக்கூறும்படி, மனித உரிமைகள் மனு ஊடாக கோரமுடியுமென மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘19ஏ’ திருத்தம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு திருத்தம், அரச தலைவரது விசேட அதிகாரம் அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக அமைய வேண்டுமெனவே குறிப்பிடுகிறது.
அரச தலைவருக்கெதிராக குடிசார் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் எதனையும் எடுக்க இயலாது. அரச தலைவரிடமிருந்து அவரது மனைவி விவாகரத்து பெறவிரும்பினால்கூட, அவரது மனைவி, அரச தலைவரின் பதவிக் காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு அரச தலைவர், தான் பதவியிலிருந்த காலத்தில் எடுத்த எந்த நடவடிக்கைகளுக்கெதிராக அவர் பதவியை விட்டு விலகிவிட்ட நிலையில்கூட எதுவிதமான சட்டநடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
அமைச்சர்களது அதிகாரங்களுக்கு உச்ச வரம்பொன்று உள்ளமை போன்று குறைந்த வரம்பு என்று ஒன்றில்லை. அரச தலைவர் விரும்பினால், சகல அமைச்சுக்களையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முடியும். ஆனால் இதுவரை எவரும் அந்த தவற்றைச் செய்யவில்லை.
அரசமைப்புக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரச தலைவரது
அதிகாரங்களாகக் குறைந்தன
1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசமைப்பின்படி அரச தலைவருக்கு குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள், அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புக்கான திருத்தங்களால் குறைக்கப்பட்டன. அரசமைப்புக்கான 13ஆவது திருத்தமானது அரச தலைவருடைய அதிகாரங்களை, மாகாண அமைச்சரவைகளுக்கு 36 விஷயங்கள் தொடர்பாக மாற்றிக் கொடுத்துள்ளது.
சில சிறப்பான சந்தர்ப்பங்களில் மட்டுமே, அரச தலைவர் ஆளுநர்களூடாக மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தலாம். அரசமைப்புக்கான 19ஆவது திருத்தம் அரச தலைவரின் அதிகாரங்களை மேலும் குறைத்துள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்புச்சபை, தலைமை நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் போன்ற பதவிகளுக்கான நியமனங்களின்போது அரச தலைவருக்கு பரிந்துரை செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
இவற்றைப் பார்க்கும்போது, ஒரு விஷயம் தெட்டத் தௌிவாக விளங்குகிறது. இலங்கையிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரசமைப்பில் அரச தலைவரைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் இல்லாமைதான்.
ஆகவே இப்போதைய தேவை அரச தலைவரின் அதிகாரத்தை இல்லாமற் செய்வதல்ல. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் அரசமைப்புக்கள் குறித்து நன்றாக ஆராய்ந்தறிந்து கொண்டு, இலங்கையின் அரச தலைவரது அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றை மறு சீரமைப்புக்கு உட்படுத்துவதுதான்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!