ஓடும் காரிலிருந்து மனைவியை கீழே தள்ளி கொல்ல முயன்ற கணவன்: திடுக்கிடும் காரணம் அம்பலம்

இந்தியாவில், திருமணமாகி பதினோரு வருடங்களுக்குப் பிறகு, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை ஓடும் காரிலிருந்து கணவனே கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சி.சி.டி.வி காட்சியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”

கோவை துடியலூரை அடுத்து உள்ள தொப்பம்பட்டி குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. சென்னையைச் சேர்ந்தவர் அருண் ஜூடு அமல்ராஜ். இருவருக்கும் திருமணமாகி பதினோரு வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடந்த மே மாதம், கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆர்த்தியை காரில் ஏற்றிச்சென்றுள்ளார் அருண். துடியலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருக்கும்போது, கொலை செய்யும் நோக்கில், ஆர்த்தியை ஓடும் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் செல்லும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து துடியலூர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, “ கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆர்த்தியும் அருணும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஆர்த்தி மும்பையிலேயே விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதி மன்றம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சில விதிமுறைகளை விதித்து இருவரையும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி மும்பையில் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவை வந்துள்ளார் ஆர்த்தி.

அருணும் சென்னையிலிருந்து வந்து ஆர்த்தியிடம் சமரசமாகப் பேசியிருக்கிறார். மே மாதம் 7-ம் திகதி, எல்லோரும் குடும்பத்தோடு ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள் அங்கேயே அருண் தனது பெற்றோர்களோடு சேர்ந்து ஆர்த்தியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆர்த்தியைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். தனது கணவர் நீதிமன்ற விதிகளை மீறுவதாகவும் தன்னையும் தனது குழந்தைகளையும் மிரட்டுவதாகவும் கூறி ஊட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஆர்த்தி. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸாரிடம், `இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன்’ என்று உறுதியளித்து ஆர்த்தியை கோவைக்கு அழைத்து வந்துள்ளார் அருண்.

கோவை துடியலூரை அடுத்து உள்ள குருடம்பாளையத்தில் உள்ள ஆர்த்தியின் தங்கை வீட்டிலிருந்து, சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆர்த்தியை காரில் ஏற்றிச்சென்ற அருண், சிறிது தூரத்திலேயே மீண்டும் பிரச்சினை செய்துள்ளார். பின்பு அருணும் அவரது பெற்றோரும் சேர்ந்து ஆர்த்தியை ஓடும் காரிலிருந்து கொலை செய்யும் நோக்கில் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். காரிலிருந்து ஆர்த்தி கீழே தள்ளப்படும் காட்சிகள் அப்பகுதியில், பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி உள்ளது. காரிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த ஆர்த்தி பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பான மேலதிக விபரங்களை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!