40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற விவசாயி!

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வடோடா என்கிற குக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980-ம் ஆண்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் 40 ஆண்டுகளாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி ஸ்ரீராம் கராத்தேயின் பேரன் ஈஸ்வர் கராத்தே, புல்தானா மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து விவசாயி ஈஸ்வர் கராத்தே கூறுகையில், “மின்சார இணைப்பு கோரி எனது தாத்தா கடந்த 1980-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். 40 ஆண்டுகளாகியும் தற்போதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனில்லை” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக புல்தானா மின்சாரத்துறை அதிகாரி கூறியதாவது:- “1980-ல் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஸ்ரீராம் கராத்தே இறந்துவிட்டார். இதையடுத்து, 2006-ம் ஆண்டு நிலுவை தொகையை செலுத்துமாறு ஈஸ்வர் கராத்தேவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நிலுவை தொகையை செலுத்த தவறிவிட்டார். ஈஸ்வர் கராத்தே நிலுவை தொகையை செலுத்தினால் நாங்கள் மின் இணைப்பை வழங்குவோம்” இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!