வடகொரியா தனது அணுவாயுதச் சோதனை மையத்தை நிர்மூலமாக்கத் திட்டமிட்டுள்ளது என்று பன்னாட்டு ஊடகமான ரொயிட்டர்ஸ் குறிப்பிட்டது.
தென்கொரியாவில் அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வடகொரியா பங்கேற்றதை அடுத்து கொரிய நாடுகளுக்கு இடையிலான ஆறு தசாப்தகாலப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்– – தென்கொரிய அதிபர் மூன் ஜெ இன் இருவரும் அண்மையில் சந்தித்துக் கொண்டனர்.
அணுவாயுதங்களைக் கைவிட வடகொரியா சம்மதம் தெரிவித்ததை அடுத்து கிம் ஜோன் உன் -– அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையிலான சந்திப்பும் விரைவில் இடம்பெறவுள்ளது.
அணுவாயுதம் தொடர்பில் தாம் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்காவிட்டால் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பில் இருந்து இடைநடுவில் வெளியேறுவேன் என்று ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு நாளும் நிறைவேற்றி வருகிறது வடகொரியா. அணுவாயுதங்களைக் கைவிடுகிறோம் என்று முன்னதாக அறிவித்தது. அணுவாயுதச் சோதனை மையங்களை மூடுவோம் என்று பின்னர் அறிவித்தது. தற்போது அணுவாயுதச் சோதனை மையங்கள் நிர்மூலமாக்கப்படும் என்று தற்போது தெரிவித்துள்ளது வடகொரியா.
ட்ரம்ப் பாராட்டு
வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு முன்னரே அணுவாயுதச் சோதனை மையத்தை நிர்மூலமாக்குவதற்கு வடகொரியா முன்வந்துள்ளமை சிறப்பானது. பாராட்டப்பட வேண்டியது என்று தனது கீச்சகத்தில் குறிப்பிட்டார் ட்ரம்ப்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!