மதுபோத்தலில் ரீ சேட்டுடன் காந்தி படத்தை வெளியிட்ட அவலம் : இந்தியாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இஸ்ரேல் நிறுவனம்

சந்தைகளில் விற்பனையாகும், வெளிநாட்டு பொருட்களில் இந்து கடவுள், இந்திய தலைவர்கள் அவ்வப்போது அவமதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இப்போது அதுபோன்ற ஒரு சம்பவம் இஸ்ரேல் நாட்டில் நடந்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த மல்கா மதுபான நிறுவனம், அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி மதுபான போத்தல்களில் மகாத்மா காந்தியின் படத்தை வெளியிட்டுள்ளது.

மேலும், ரீ சேர்ட், கண்ணாடியும் அணிந்த விதத்தில் அவருடைய புகைப்படம் மாறுபட்ட தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது.

மாநிலங்களவையில் இவ்விவகாரம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்ட போது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். அத்தோடு, இது குறித்து இஸ்ரேல் அரசை இந்திய தூதரகம் அணுகி முறையிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.

இதையடுத்து, மல்கா மதுபான நிறுவனம், இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார்.

மேலும், மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மதுபான போத்தல்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!