தெரிவுக்குழுவில் அடுத்த வாரம் பிரதமர் சாட்சியமளிக்கவுள்ளார்- கிரியெல்ல

தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும் தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவுக்குழுவில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் பாதுகாப்பு கூட்டுவதில் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதில் பங்கேற்பதில் இருந்த நெருக்கடிகள் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளிப்பார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிருந்தார். அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க பிரதமர் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாத காரணத்தால் , பிரதமர் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார் என்பதன் அடிப்படையிலேயே அவரை தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!