முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தலைமையேற்று நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையே முரண்பாடுகள் நீடித்து வந்திருந்த நிலையில் அது முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்
கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு, வடக்கு மாகாண சபை வளைந்து கொடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடக்கு மாகாணசபையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முள்ளிவாய்க்கால் மண்ணில் கலந்துரையாடல் நடைபெற ஏற்பாடாகியிருந்தபோதும் அது நடைபெறவில்லை.
இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிகள் உள்ளடங்கலான குழுவினர் நேற்றுமுன்தினம் திங்கட் கிழமை மாலை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு, முதலமைச்சர் இணக்கம் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்திருந்த நிகழ்சி நிரலின் ஒழுங்குக்கு அமைவாக, நிகழ்வுகளை முன்னெடுக்க முதலமைச்சர் சந்திப்பில் இணங்கியிருந்தார்.
இன்று புதன் கிழமையே, முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக்குழு முள்ளிவாய்க்கால் மண்ணில் சந்திப்பு நடத்தும் என்றிருந்த நிலையில், மாணவர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதும் நேற்றுக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவில் 9 பேர் உள்ள நிலையில் 4 பேர் மாத்திரமே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், த.குருகுலராஜா ஆகியோரே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் 3 பேரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான பசீர் காக்காவும் கலந்து கொண்டனர். மாணவர்களுடன் கடந்த சனிக்கிழமை பங்கேற்ற பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எவரும் நேற்றுச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
முதலமைச்சர் முன்னரே எழுதிவந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்தார். அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இதேவேளை சுடரேற்றல் காலை 10 மணிக்கு இடம்பெறவேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானித்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மதியம் 12.30 மணிக்கே இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தற்போது 11 மணிக்கு சுடரேற்றல் மாற்றப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கின் எட்டு மாவட்டங்களையும், ஏனைய மாவட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகவும், மொத்தமாக 9 சுடர்கள் ஏற்றுவது என்றும், அவை அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநித்துவப்படும் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்றுவார் என்றும் வடக்கு மாகாணசபையின் நினைவேந்தல் குழு முடிவெடுத்திருந்தது.
இதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
சரியான ஒருவரை எல்லா மாவட்டங்களிலிருந்தும் தெரிவது கடினம் என்றும் ஒரேயொரு முதன்மைச் சுடரை ஏற்றுவதுதான் சரியானது என்றும் கூறியுள்ளனர். இதனை வடக்கு மாகாண சபை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்டவர்களே சுடரேற்றுவர் என்று முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், தற்போது முதலமைச்சர் சுடரை ஏற்றி, பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கையளிக்க அவர் ஏற்றுவார் என்று மாற்றப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!