வடக்கு, தெற்கிலிருந்த பயங்கரவாதிகள் அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்லாதொழித்தனர் ; ராஜித

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக நாம் அங்கிருந்து வெளியேறினோம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக நாம் அங்கிருந்து வெளியேறினோம். அவ்வாறு வெளியேறியதன் மூலம் தலையை கருங்கல்லில் அடித்துக் கொண்டதாக சிலர் கூறினர். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று திறக்கப்பட்ட இந்த வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அதனை திறக்க அனுமதிக்கப்பபோவதில்லை எனவும், வைத்தியர்கள் சிலர் கூறினர். அதன் காரணமாகவே வைத்தியசாலை திறக்க காலத்தாமதம் ஆகியது. மாறாக எனது தனிப்பட்ட தாமதம் இதற்கு காரணம் அல்ல.

மேலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை சகல நவீன வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பிரதேச மக்களுக்கு சிறந்த பலனை பெற்றுக் கொள்ள முடியும்.

நவீன் திஸாநயக்கவின் தந்தை இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பு செய்தார். நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஆளுமை அவரிடம் காணப்பட்டது. அது பிறப்பிலிருந்தே அவருக்கு கிடைத்திருந்தது.

நாட்டை கட்டியெழுப்ப கூடிய எதிர்கால சிந்தனை மிக்க ஒரு அரசியல் தலைவராவார். யுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார்.

வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள் அவ்வாறான அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்லாதொழித்தனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!