வினோத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் தவிக்கும் 20 வயது வாலிபர்!

திருச்செந்தூர் அருகே உள்ள பிளோமி நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 55). கூலித் தொழிலாளியான இவரது மனைவி தில்லையம்மாள். இவர்களுக்கு அம்மையப்பன் (23), கோவிந்தராமன் (20) என்ற இரண்டு மகன்களும், பொன்மீனா (16), வள்ளித்தங்கம் (13) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் அம்மையப்பன் கூலி தொழிலாளியாக உள்ளார். பொன்மீனா அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1, வள்ளித்தங்கம் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 2010-ம் ஆண்டு தில்லையம்மாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நோயால் சந்தானம் இறந்து போனார். இதனால் பெற்றோர் இறந்துவிட்டதால் பராமரிக்க ஆளின்றி 4 பேரும் வறுமையில் வாடினர்.

இதனால் அம்மையப்பன், கோவிந்தராமன் ஆகியோர் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கூலிவேலைக்கு சென்றனர். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராமன் 12 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்காக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு குளிர்பானம் குடித்துள்ளார். இதனால் பாதிப்பு ஏற்பட்டு கால்கள் நடக்க முடியாமல் கடந்த 9 மாதமாக ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.

மருத்துவர்கள் குளிர் பானங்கள் குடித்ததினால் ஏற்பட்ட விளைவு தான் என்று கூறியுள்ளார்கள். ஆனாலும் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாததினால் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பல லட்ச ரூபாய் செலவு செய்தும் பலனில்லை. மேலும் செலவு செய்ய பணம் இல்லை. இவரை கவனித்து வந்த அம்மையப்பன் பணம் இல்லாததினால் தம்பியை படுக்கையில் வைத்து தான் கூலிவேலை செய்து வந்து கிடைக்கும் வருமானத்தில் இரு தங்கையின் படிப்பு, தம்பியையும் கவனித்து கொண்டிருக்கிறார்.

எனது தம்பிக்கு பல பேரிடம் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துவிட்டேன். குணமாகவில்லை. மேலும் சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுவதால் என்னால் முடியவில்லை. அரசோ? தனியார் அமைப்போ? முன்வந்து எனது 20 வயது தம்பியை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் இது குறித்து கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுக்கு முன்பு தந்தை இருந்த போது அம்மையப்பன் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இலவச கல்வி திட்டத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு படிக்க தனது மாற்றுச்சான்றிதழை கொடுத்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். 5 நாட்கள் மட்டுமே கல்லூரிக்கு சென்றுள்ள நிலையில் தந்தை சந்தானம் இறந்துபோனார். இதனால் படிப்பை நிறுத்திவிட்டு கூலிவேலை செய்து தனது இரு தங்கைகளையும், தம்பியையும் கவனித்துவந்தார்.

தற்போது அந்த கல்லூரியில் சென்று மாற்றுச்சான்றிதழை கேட்டதற்கு அவர்கள் 20ஆயிரம் ரூபாய் தந்தால்தான் தருவதாக கூறியுள்ளனர். அம்மையப்பன் வறுமையை கூறியும் மாற்றுச்சான்றிதழை கொடுக்க மறுப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக தனது மாற்றுச்சான்றிதழை பெற முடியாமல் தவிப்பதாகவும் அதனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கண்ணீர் மல்க கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!