சிலைக்கடத்தலில் தங்களுக்குத் தொடர்பில்லை: அமைச்சர்கள் மறுப்பு!

தமிழகத்தில் நடைபெற்ற சிலைக்கடத்தலில் தங்களுக்குத் தொடர்பில்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிலை கடத்தல் சம்பவங்களில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், சேவூர் ராமச்சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானது.

இதையடுத்து வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, சிலை கடத்தல் வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை என இருவரும் மறுத்தனர். மேலும் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தங்கள் பெயரைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாத நிலையில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இல்லாத ஒன்றை செய்தியாக வெளியிட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!