வடக்கு பாடசாலைகளில் நாளை அரைக்கம்பத்தில் கொடி, அகவணக்கம்!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், நாளை வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அனைத்து அதிபர்களிடம், கேட்டுக்கொண்டுள்ளார்.

‘ கடந்த 70ஆண்டு கால எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம். எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பன்னாட்டுச் சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது. கடந்த முப்பதாண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளையோர் உள்ளிட்ட லட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம். இறுதியாக எம்மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பல்லாயிரக் கணக்கனக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

எமது இனத்தின் உரிமைக் குரலுக்கான போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் பன்னாட்டுச் சமூகத்திற்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!