‘எம்மை தோற்கடிக்க வெளிநாடுகள் மீண்டும் முயற்சி’ – மகிந்த

525119359OH024_South_Asian_
சிறிலங்காவின் தேர்தல்களில் தலையீடு செய்கின்ற உரிமை வெளிநாடுகளுக்குக் கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் என்னைத் தோற்கடிக்க பல நாடுகள் சூழ்ச்சிகளில் ஈடுபட்டன. எனக்கு எதிராக சதி செய்த அதே சக்திகள் வரும் அதிபர் தேர்தலில் கூட, பாரிய பங்கை வகிக்க முயற்சிக்கும்.

நாங்கள் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இல்லாவிடினும் முழு நாடும் ஆபத்தில் சிக்கும்.

எமது தேர்தல்களில் வெளிநாட்டு அரசாங்கங்கள் தலையிடக்கூடாது, ஏனென்றால் யார் தமது அதிபராக இருக்க வேண்டும் என்பதை நாட்டின் குடிமக்களே தீர்மானிக்க வேண்டும்.

அதிபர் தேர்தலைப் பிற்போடுவதற்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணியைப் பலவீகப்படுத்தவும் முயற்சிகள் நடந்தன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும், இணைவதை தடுக்க விரும்புகிறவர்கள் இருக்கின்றனர். இந்த நேரத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாங்கள் புத்திசாலித்தனமாக விளையாடினால் தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும்.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!