சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தமது பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணிக்குத் தலைமையேற்கும் நோக்கிலேயே, சபாநாயகர் பதவி விலகவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஐதேகவின் தலைமையில் வரும் ஓகஸ்ட் 5ஆம் நாள் – தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டணியில் தலைமைத்துவ சபை ஒன்று அமைக்கப்பட்டு, கூட்டணியின் செயற்பாடுகளை அந்த தலைமைத்துவ சபையே கட்டுப்படுத்தவுள்ளது.
எனினும், இந்த தலைமைத்துவ சபையில் ஐதேகவுக்கு பெரும்பான்மை இடங்கள் ஒதுக்கப்படும். தலைமைத்துவ சபையின் மூன்றில் இரண்டு பங்கு அங்கீகாரத்துடனேயே கூட்டணியின் அரசியல் முடிவுகள் எடுக்கப்படும்.
கரு ஜயசூரிய இந்த அரசியல் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று ஐதேக தலைமை யோசனை முன்வைத்துள்ளது.
இந்த நிலையிலேயே கூட்டணி தலைமையை ஏற்பதற்காக சபாநாயகர் பதவியில் இருந்து கரு ஜயசூரிய விலகிக் கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!