ஆவின் பால் பாக்கெட் கவர்களை கொடுத்து பணத்தை முகவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்!

பொது மக்கள் ஆவின் பால் பாக்கெட் கவர்களை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.

இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் பாலினை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு காலி பாக்கெட் கவருக்கு 10 பைசா வீதம் பெற்று கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் தகவல்களைப் பெற தொலைபேசி எண்களையும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆவின் நிறுவனத்தைப் போன்று தனியார் பால் நிறுவனங்களும் காலி பால் பாக்கெட் கவர்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்றும் ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!