ரணில்- சஜித் இடையே இணக்கம்- விரைவில் கூட்டணி உடன்பாடு

வரும் அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், கூடிய விரைவில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், நேற்று இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அடுத்தே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், கூட்டணியின் யாப்பில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராயப்பட்டது.

ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு முன்மொழிவில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஐதேக நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளது.

அது தொடர்பான திருத்தங்கள், கட்சியின் தவிசாளர் கபீர் காசிமிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பங்காளிக் கட்சிகளுடன் பகிரப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில், ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு திருத்தம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் என பங்காளிக் கட்சியின் தலைவரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!