காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்துள்ள இளைஞர்!

பீகாரை சேர்ந்த ஒருவர் தனது டாடா நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்துள்ளார். சாப்ரா பகுதியை சேர்ந்த 24 வயதான மிதிலேஷ் பிரசாத் என்பவர் சிறுவயதில் இருந்தே ஹெலிகாப்டரை வடிவமைத்து அதில் பறக்க வேண்டும் என்றும் பெருங்கனவோடு இருந்துள்ளார். தனது குடும்ப சூழ்நிலையால் அது நிறைவேறாத நிலையில் அவரது டாடா நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்துள்ளார். தனது சகோதரருடன் இணைந்து 7 மாதங்களில் அவர் இதனை செய்துள்ளார்.

இதற்கு 7 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்துள்ளார். அந்த காரில் பறக்க முடியாது என்ற போதிலும், ஹெலிகாப்டர் போலவே உடலமைப்பை கொண்டுள்ளதால் அதை இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மிதிலேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் எல்இடி விளக்குகளை கொண்டு அவர் தனது காரை அழகுப்படுத்தி உள்ளார். 12ஆம் வகுப்பு வரை பயின்றிருக்கும் மிதிலேஷுக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், அவர் சட்டவிரோதமாக காரை மறுவடிவமைப்பு செய்திருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!