“காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம், 3 ஆம் நாட்டின் தலையீடு அவசியமில்லை”

காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம், ஆகவே இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துக் கொள்வோம் என்றும் ‘3 ஆம் நாடு தலையீடு தேவையில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடும் எடுத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் ஜி7 மாநாட்டுக்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் சந்தித்து உரையாடியுள்ளளனர். இதன்போதே மோடி மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் தாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக தன்னிடம் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துக் கொள்வோம் என்றும் ‘3ம் நாடு தலையீடு கோரி தொந்தரவுபடுத்த விரும்பவில்லை’ என்றும் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதாவது, 1947-க்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாடாக இருந்தது என்று கூறிய மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இம்ரான் கானுடன் சமீபத்தில் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலைக் குறிப்பிட்ட ட்ரம்ப், வறுமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருநாடுகளிலும் உள்ளது. ஆகவே இருநாடுகளும் மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும் என்று இம்ரான் கூறியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என்பதே தன் நிலைப்பாடு என்றுட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!