ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உருவாக்கும் பணிகள் முழுமையடைந்துள்ளன. ஜனநாயக தேசியக் கூட்டணி கைச்சாத்திடப்படும் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதை போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
லரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய முன்னணி
ஐக்கிய தேசிய முன்னணி தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து உருவாக்க தீர்மானித்திருந்த ஜனநாயக தேசிய முன்னணி கடந்த மாதம் 5ஆம் திகதி நிறைவு பெறும் நிலையில் இருந்தது. உருவாக்கப்பட்ட கட்சி யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை காணப்பட்டதால் கூட்டணி விவகாரம் பிற்போடப்பட்டது.
கட்சியின் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த இரண்டு வார காலமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பங்காளி கட்சிகளின் பரிந்துரைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கட்சியின் தலைமைத்துவ சபையினால் பெயர் குறிப்பிடப்பட்டு கூட்டணியின் ஊடாக தெரிவு செய்யப்படுவார். பொதுச்செயலாளர் காரியாலய செயற்பாடுகள் சுயாதீனமாக செயற்படும். உள்ளிட்ட விடயங்கள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளன. அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் கூட்டணி நிச்சயம் ஸ்தாபிக்கப்படும்.
கொள்கை திட்டம்
ஜனநாயக தேசிய முன்னணியின் கொள்கை திட்டங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். புதிய அரசியல் பயணத்தை நோக்கிய கொள்கை திட்டம் உருவாக்கப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.
கொள்கைத்திட்டம் உருவாக்கலில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கனேசன், ரிஷாத் பதியுதீன், அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கபீர் ஹசிம், மற்றும் திகாம்பரம் ஆகியோர் செயற்படுவார்கள். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
ஐ.தே.க. வின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை
கட்சியின் கொள்கைகளுக்கு அப்பால் சென்று செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எவரும் விதிவிலக்கு கிடையாது. வீதிகளில் கோஷம் எழுப்பி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது. கடந்த நாட்களில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த பேரணி கட்சியினை அவமதிப்பதாகவே காணப்பட்டது.
கட்சியின் தலைமைத்துவத்தினையும், கொள்கைகளையும் இழிவுப்படுத்தி ஒருபோதும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பதவிகளை ஒருபோதும் பெற்று விட முடியாது. கட்சியினை பலப்படுத்தியே சிறந்த அரசியலை முன்னெடுத்து செல்லவேண்டும்.
ஊடக சுதந்திரம்
நல்லாட்சி அரசாங்கம் ஊடகங்களுக்கு பெற்றுக் கொடுத்த சுதந்திரம் தற்போது மறக்கப்பட்டுள்ளது. இன்று சில ஊடகங்கள் ஊடக தர்மத்திற்கு அப்பாற் சென்று செயற்படுவது வருத்தத்திற்குரியது. இன்று ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரச அதிகாரிகள் ஊடகங்களினால் சரியோ, பிழையோ பகிரங்கமாக விமர்சிக்கப்படுகின்றார்கள். ஆனால் கடந்த நான்கு வருட காலமாக எந்த ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்படவும், இல்லை தாக்குதலுக்கு உள்ளாகவும் இல்லை.
கடந்த அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் எவ்வாறு காணப்பட்டது என்பதற்கு லசந்த விக்ரமதுங்க உட்பட ஊடகவியலாளர்களின் படுகொலை ஒரு எடுத்துக்காட்டாகும். ஜனநாயகத்தை மீறி சர்வாதிகாரமாக செயற்பட்டவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி கருத்துரைப்பது நகைப்பிற்குரியது. ஊடகவியலாளர்கள் அப்போது மதிக்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியே பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் இடம் பெற்றது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் தாஜீதின் ஆகியோரது உறவினர்களை காணும் போது வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை தற்போது காணப்படுகின்றது. சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார மேடைகளில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக மறந்து விட்டார்.
வடக்கு உள்ளிட்ட நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இன்று உரிமைக்காக வீதியில் இறங்கி சிங்கள மக்களுக்கு நிகராக அரசாங்கத்தினை விமர்சிக்கின்றார்கள். இந்த சுதந்திரமே நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான வெற்றியாகும். கடந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. எவரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கப்படவில்லை. இனவாத அரசியலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யும் சூத்திரம் பலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுந்த பதிலடி வழங்கப்படும். தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி நிரந்தர பலமான ஒரு தலைமைத்துவத்தினை முதலில் உருவாக்கி அதனூடாக ஜனநாய மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சம் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!