குழந்தையை சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைக்க பொம்மைக்கும் சிகிச்சை!

டெல்லியில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த, 11 மாத பெண் குழந்தைக்கு நூதனமுறையை கையாண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜிக்ரா மாலிக் என்ற அந்த குழந்தை வீட்டில் மெத்தையில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் டெல்லியிலுள்ள லோக்நாயக் மருத்துமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அந்த குழந்தையின் இடது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த குழந்தை ஒரு இடத்தில் இருக்காமல், மருத்துவர்களை படாதபாடு படுத்தியது.

இதனால் எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பினர். அப்போது அந்த குழந்தையின் தாயாரான ஃபரீன், ஒரு புதிய யோசனையை தெரிவித்தார். அதன்படி, குழந்தை ஜிக்ராவுக்கு மிகவும் பிடித்தமான பாரி என்ற பெயர் கொண்ட பொம்மையை மருத்துமனைக்கு கொண்டு வந்தனர்.

முதலில் அந்த பொம்மை பாரிக்கு சிகிச்சை அளிப்பது போல் மருத்துவர்கள் காலில் கட்டு போட்டனர். அதனைப் பார்த்த குழந்தை ஜிக்ராவும், தனக்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டு சிகிச்சை அளிக்க ஒப்புக் கொண்டாள். இந்த யோசனை நன்றாக வேலை செய்தது என்று மருத்துவர் அஜய்குப்தா தெரிவித்துள்ளார். குழந்தை ஜிக்ராவுடன் பொம்மையான பாரியும் நோயாளியாக மாறி இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!