பள்ளிக்கூடத்திற்கு மின் கட்டணம் ரூ.618.5 கோடி – அதிர்ச்சியில் நிர்வாகம்!

உத்தரபிரதேச பள்ளிக்கு இரண்டு மாத மின் கட்டணமாக 618.5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி மாவட்டத்தில் இந்த பள்ளி அமைந்துள்ளது. மின்சார கட்டண பில் குறித்து அதிர்ச்சியடைந்த பள்ளி அதிகாரிகள் இது குறித்து கேட்க மின்சார நிலையத்தை அணுகினர். ஆனால், அந்தத் துறை அதிகாரிகள் அது வங்கி செய்த பிழையாக இருக்கும் என வங்கி மீது புகார் கூறுகின்றனர். மேலும் செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் மின்சார நிலுவைத் தொகையை செலுத்துமாறு பள்ளியை மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை செலுத்த வழி இல்லை என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச அரசு செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் மின் கட்டணம் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த கட்டண பில் வந்துள்ளது. இருப்பினும், இரண்டு முன்னேற்றங்களும் தொடர்புடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உத்தரபிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, நகர்ப்புறங்கள், வணிக மற்றும் கிராமப்புற நுகர்வோருக்கு மின் விகிதங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.

நகர்ப்புற நுகர்வோர் 12 சதவீத அதிகரித்த கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும், தொழில்துறை பகுதிகளில் மின் கட்டண விகிதம் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. கிராமப்புறங்களில், நிர்ணயிக்கபட்ட கட்டணம் மாதத்திற்கு ரூ.400 லிருந்து ரூ.500 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யோகி ஆதித்யநாத் அரசு மின் விகிதங்களை 12.73 சதவீதம் அதிகரிக்க உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!