அகிம்சையே ஆயுதங்களில் வலிமையானது. சத்தியம் வாழ்வில் நிலையானது. உயர்வானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர் காந்தியடிகள். பதவிகளை வகிக்காமல் உலக அளவில் புகழ்பெற முடியும் என்று அவர் நிரூபித்தார். மகாத்மா என்ற பெருமைக்கு உரிய ஒருவராக காந்தி அண்ணல் மட்டுமே விளங்குகின்றார். எனது வாழ்க்கையே எனது செய்தி என்று கூறும் அவரது வாழ்க்கை வரலாறு எல்லோருக்கும் ஒரு சிறந்த பாடமாக விளங்குகின்றது.
தேசபிதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் காந்திஜி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மோகன்தாஸ் கரம்சந்தி காந்தி என்பதாகும்.
காந்திஜி தனது தொடக்கக் கல்வியை ராஜ்கோட் என்னும் இடத்தில் மேற்கொண்டார். மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்றபின்பு பவநகர் என்னும் இடத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார்.
காந்திஜிக்கு இளமையிலேயே சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக இங்கிலாந்து செல்ல ஆசைப்பட்டார். காந்தியை வெளிநாட்டுக்கு அனுப்ப அவருடைய தாயாருக்கு சிறிதும் மனமில்லை. நிலைமையைப் புரிந்துகொண்ட காந்திஜி தாயாருக்கு வெளிநாட்டில் அசைவ உணவு சாப்பிட மாட்டேன். மது அருந்த மாட்டேன். வேறு பெண்களுடன் தொடர்பு கொள்ளமாட்டேன் என்ற மூன்று உறுதிமொழிகளை அளித் தார். அதைக் கடைசிவரை கடைப்பிடித்தார். 1888 ஆம் ஆண்டு லண்டன் சென்றார். அங்கு நான்கு வருடங்கள் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்திஜி ராஜ்கோட், மும்பை ஆகிய இரு இடங்களில் வக்கீல் தொழிலைச் செய்தார். வியாபாரக் கம்பனி அழைத்தன் பேரில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றார். அங்கு வெள்ளையர்கள் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் இந்தியர்களை அடிமையாக நடத்தினர். அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்காக காந்திஜி வாதாடினார். எனவே அவரை வெள்ளைக்காரர்கள் கூலிகளின் வக்கீல் என்று கேலி செய்தனர்.
தென்னாபிரிக்காவில் ஒருமுறை ரயில் முதல் வகுப்பு பெட்டியில் காந்தி பயணம் செய்தார். அதே பெட்டியில் ஒரு வெள்ளையனும் பயணம் செய்தான். அவன் காந்தியை இந்தியன் எனத் தெரிந்துகொண்டான். உடனே பெட்டியை விட்டு இறங்கும்படி சொன்னான். காந்திஜி தனது பயணச்சீட்டைக் காட்டி இறங்க மறுத்தார். வெள்ளையன் காந்தியினுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கி வெளியே எறிந்தான்.
அப்போதைய வெள்ளையர்களின் நிறவெறியைப் புரிந்துகொண்டார் காந்தி.
1906 ஆம் ஆண்டு காந்தி இந்தியர்களைப் பிரிவுபடுத்தும் கறுப்பு சட்டத்தை எதிர்த்தார். இதனால் தென்னாபிரிக்க அரசு அவரைக் கைது செய்தது. 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தின்படி ஆங்கிலேயரின் சட்ட திட்டங்களை எதிர்க்கவேண்டும். ஆங்கில அரசு அளித்த சேர் பட்டம் மற்றும் வேறு பட்டங்களை விட்டுவிடவேண்டும். கல்லூரி, அலுவலகங்களில் பணியாற்றுவோர் தங்கள் வேலையை விட்டுவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் காரணமாக காந்தி கைது செய்யப்பட்டார்.
ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்ததைக் கண்டித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி தண்டி என்னும் இடத்தில் உப்பு அள்ள முடிவு செய்தார். அதற்காக தண்டி யாத்திரை மேற்கொண்டார் . இதனால் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்துகொண்டார். 1942 ஆம் ஆண்டு 9 ஆம் திகதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இதன் காரணமாக காந்தி, நேரு, பட்டேல் உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காந்திஜி ஆகாகான் மாளிகைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் போராட்டத்தைத் தொடங்கினார். இதன்படி ஆங்கில அரசின் முயற்சிகளுக்குப் பொருளுதவி செய்யக்கூடாது ஆள்பலம் சேர்க்கக்கூடாது என்று கூறினார். ஆங்கிலேய அரசு இந்தியாவை இரண்டாகப் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்தது. இந்தியா, பாகிஸ்தான் என்று பிரித்து இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது என்று முடிவு செய்தது.இனக்கலவரங்கள் ஏற்பட்டன. அமைதியை உருவாக்க விரும்பிய காந்தி நவகாளி யாத்திரையை மேற்கொண்டார் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இந்திய நாட்டின் நன்மைக்காக இந்து – முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமையை ஒழித்தல், மது விலக்கு ஒப்பந்தம், மகளிர் முன்னேற்றம், தொழுநோய் ஒழித்தல் போன்ற திட்டங்களை அறிவித்தார்.
அகிம்சை வழி நடந்த காந்திஜி 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டாலும் அவரின் அகிம்சை, உண்ணாநோன்பு, சத்தியம் போன்றவை என்றும் நிலைத்து நிற்கின்றன. அவருடைய நினைவாக காந்தி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி கிராமிய பல்கலைக்கழகம் செயற்பட்டு வருகின்றது. சென்னை கிண்டியில் காந்திமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் காந்தியின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. உலகப் பேரொளி உத்தமர் காந்தியின் கொள்கைகளால் பெருமளவான மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். காந்தியக் கோட்பாடு உலகம் உள்ளளவும் நிலைபெறும் ஒன்றாக மாறிவிட்டது. அண்ணலின் 150 ஆவது பிறந்த தினமாகிய இன்றைய நாளில் அவர் வழி நடக்கவும் அவரின் நிர்மாணத்திட்டங்களைச் செயற்படுத்தவும் உறுதிபூணுவோமாக.
எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!