கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கமாட்டார். புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெறுவது நிச்சயமாகும். அவரின் வெற்றியை தடுத்து நிறுத்தவே தற்போது ஐக்கிய தேசிய கட்சியினர் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அவர்கள் என்ன சதித்திட்டங்களை மேற்கொண்டாலும் அதனை நாங்கள் வெற்றிகொள்வோம். அத்துடன் வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்கள் மூலம் கொண்டுவரப்படும் பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருக்கின்றது. இதன் மூலம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசாங்கம் இறுதிநேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் பாரிய சதித்திட்டத்தை மேற்கொள்ளப்போகின்றதா என்ற சந்தேகம் எமக்கிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளார் சஜித் பிரேமதாச விலங்கிடப்பட்டே வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சி தலைவராக இருப்பார், ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க கட்சியின் உபதலைவராக இருக்கவேண்டும் போன்ற நிபந்தனைகள் அவருக்கு விடுக்கப்பட்டிருக்கின்றன.
அதனால் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானாலும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெறுவது நிச்சயமாகும். அவர் ஜனாதிபதியானதும் பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க இருக்கமாட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி யானவுடன் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினார். அத்துடன் புதிய அமைச்சரவையையும் அமைத்தார். அதேபோன்றே கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படுவர் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!