சந்தேக தீயில் கருகிய காதல்..! உயிரை மாய்த்துக்கொண்ட காதலி.

பொறியியல் படித்துக் கொண்டிருந்த போதே, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தபால் ஊழியராக மத்திய அரசு பணியில் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்தேக தீயில் காதலியை பொசுக்கிய விபரீத காதலன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி… திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த நகராட்சி ஊழியர் சுமதி என்பவரின் மகள் பிரீத்தி. கணவர் 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட சுமதி தான் பிரீத்தியை வளர்த்து வந்தார். கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த பிரீத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் தபால் ஊழியர்களுக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றதால், தபால் ஊழியராக தாமரைக்குளம் அடுத்த எடகீழையூரில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 20 நாட்களாக தனது தாத்தா தங்கையன் வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கோவைக்கு சென்று கல்லூரி நண்பர்களை சந்தித்து திரும்பிய பிரீத்தி, திங்கட்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய பிரீத்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரீத்தி பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரித்தபோது, பிரீத்தி கல்லூரியில் படித்தபோது அவரை மாணவர் ஒருவர் காதலித்ததாகவும், தபால் ஊழியராக பணி கிடைத்த பின்னர் பிரீத்தியால் முன்புபோல் பேச நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கோவை சென்ற பிரீத்தி தனது காதலன் சொன்ன இடத்தில் அறை எடுத்து தங்காமல், தனியாக ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகின்றது. இதனால் பிரீத்தியின் நடவடிக்கை குறித்து காதலனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரீத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக வார்த்தைகளால் சுட்டதால் நொந்து போன பிரீத்தி இந்த சோக முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

மேலும் தங்களது பூர்வீக சொத்தை தனது தாய் விற்பதற்கு எடுத்த முடிவும் பிரீத்திக்கு அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகின்றது. உலகில் யாரும் நம்மை புரிந்து கொள்ள வில்லையே ? என்ற விரக்தியில் தபால் ஊழியர் பிரீத்தி இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, மன அழுத்தத்தை குறைத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டால் மட்டுமே சாதனைகளைப் படைக்க முடியும்..!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!