தன்னை தொந்தரவு செய்த கணவன்… தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொன்ற மனைவி!!!

கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். புழல் புத்தகரத்தைச் சேர்ந்த சுரேஷ், அதே பகுதியில் இறைச்சிக்கடையொன்றில் வேலை பார்த்து வந்தார். சுரேஷ், அனுசுயா தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த ஞாயிறன்று காலை வீட்டில் சுரேஷ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி அனுசுயா தொலைபேசி மூலம் புழல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சுரேஷின் உடலை கைப்பற்றிய காவல்துறை, உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. ஆனால், கழுத்தில் காயம் இருந்ததால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மனைவி அனுசுயாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, கணவர் சுரேஷை, கொலை செய்ததை அனுசுயா ஒப்புக்கொண்டுள்ளார்.

அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததோடு, தன்னை அடித்தும் துன்புறுத்தியதால் சுரேஷை கொலை செய்ததாகவும், உறவினர் முரசொலிமாறன் என்பவரின் உதவியுடன் கணவருக்கு தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாகவும் அனுசுயா கூறியுள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் மயங்கிய கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்ததாகவும், இதற்கும் உறவினர் உதவியதாகவும் அனுசுயா கூறியுள்ளார்.

இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், அனுசுயாவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். கொலைக்கு உதவிய முரசொலிமாறனை தேடி வருகிறார்கள். குடித்துவிட்டு துன்புறுத்திய கணவரை மனைவியே தோசையில் தூக்கமருந்து கொடுத்து கொலை செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!