புத்தகப் பையில் 6 மாத குழந்தை.. கல்லூரி மாணவி கைது..!

கேரள மாநிலம் இடுக்கியில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான கல்லூரி மாணவி ஒருவர், தனக்குப் பிறந்த குழந்தையின் சடலத்தை புத்தகப் பையில் மறைத்து வைத்து சுற்றித் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் வாத்திகுடி என்ற ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கல்லூரியில் உடன் பயின்ற மாணவனைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. காதலித்த இளைஞருடன் அந்த மாணவி பலமுறை நெருக்கமாக இருந்தாகவும் இதனால் கர்ப்பமானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும், புத்தகப் பையில் வைத்து சுற்றித் திரிவதாகவும் அந்தப் பெண், நேற்று காலை தனது உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், உடனடியாக வாத்திகுடி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து அந்த இளம்பெண்ணை பிடித்த போலீசார் பையை கைப்பற்றினர். பைக்குள் குழந்தையின் சடலம் கிடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், அந்த மாணவி, கர்ப்பம் தரித்து 6 மாதமே ஆனதாகவும், பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

வீட்டின் குளியலறைக்குச் சென்று குழந்தை பெற்றதாகவும், குறைப்பிரசவம் என்பதால், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் அந்த மாணவி கூறியதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதற்காக குழந்தையின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் சுற்றி, புத்தகப் பையில் மறைத்து வைத்து வீட்டை விட்டு மாணவி வெளியேறி விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணின் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றிருப்பதும், சில நாட்கள் கழித்து அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். பையில் இருந்து பச்சிளங்குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது குறித்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள வாத்திகுடி போலீசார், அந்த மாணவியைக் கைது செய்துள்ளனர். இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த மாணவிக்கு, காவல்துறை கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!